Monday, September 9, 2019

இனிக்கும் தமிழ் - 100

இனிக்கும் தமிழ் நூறாவது பதிவு இது.
இனிக்கும் சங்கப்பாடல்கள் பல ஆயிரம் கொட்டிக் கிடக்கின்றன.அவற்றுள் சிலவற்றை, கடந்த சில மாதங்களாக வழங்கி வந்தேன்.

இன்றுடன் இப்பணிக்கு சற்றே ஓய்வு கொடுக்க எண்ணியுள்ளேன்.

இன்றைய பதிவில்..

இனிக்கும் தமிழ் என பெயரிடப்பட்டு, மீசைக்கவிஞனின் பாடல் ஏதும் இல்லையெனில் அது முழுமையாக நிறைவு பெற்றதாக ஆகாது.

ஆகவே..செந்தமிழ் நாடு எனக் கேட்டதுமே தேன் பாய்கிறது காதுகளில் என்ற கவிஞன்..தமிழ்நாட்டின் பெருமைகளைப் பாடுவதுடன் இத்தொடர் நிறைவுபெறுகிறது.

இதைத்தொடர்ந்து படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு 

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு 

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு 

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு 

No comments:

Post a Comment