Tuesday, September 10, 2019

இனிக்கும் தமிழ்

ஒரு வேதியன்  தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் கீழே விழுந்தது. விழுந்த அம்பு, அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய்ந்ததால் அவள் இறந்து போனாள். நீர் கொண்டுவந்த வேதியன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். இவளை யார் கொன்று இருப்பார்கள் என்று சுற்று முற்றும் பார்த்த போது , அங்கு ஒரு வேடன் இருப்பதைக் கண்டு, அவன்தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து அவனை பாண்டிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

வேடனை தண்டிக்க வேண்டும் என்று வேதியன் வேண்டுகிறான்.

தான் கொல்லவே இல்லை என்று வேடன் சாதிக்கிறான்.

அமைச்சர்களும், இதற்கு நூல்களில் ஒரு வழியும் இல்லை. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

பாண்டியன் இறைவனிடம் முறையிட்டான். அப்போது, "இந்த ஊரில் உள்ள வணிகத் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு நீ அந்த வேதியனோடு சென்று பார். உன் குழப்பத்தை தீர்த்து வைப்போம்" என்று அசரீரி சொல்லக் கேட்டு, மன்னனும் வேதியனும் அங்கு சென்றார்கள்.

அப்போது, இறை அருளால், இரண்டு எம தூதர்கள் பேசுவது அவர்களுக்குக் கேட்டது.

இரண்டு பேரில் ஒருவன் கேட்கிறான் "இந்த வீட்டில் உள்ள மணமகனின் வாழ் நாள் முடிந்து விட்டது. அவன் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவனுக்கோ ஒரு நோயும் இல்லை. இவன் உயிரை எப்படி எடுப்பது" என்று கேட்கிறான்.

இது முன் கதைச் சுருக்கம்.

இப்போது

அதற்கு இன்னொரு தூதன் சொல்கிறான்,

"எப்படி ஆல மரத்தில் முன்பே சிக்கியிருந்த அம்பை காற்றால் வீழ்த்தி பார்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ அப்படி, இந்த திருமண ஆரவாரத்தில் வெளியே கட்டியிருக்கும் கன்றை ஈன்ற பசுவை வெருண்டு ஓடச் செய்து , இவனை குத்த வைத்து இவன் உயிரைக் கவர்வோம்"

என்றான்.

பாடல்


ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக் 
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி  இந்தச் 
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற 
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க  என்றான்.

பொருள்


ஆற்று = வழி , வழியில் உள்ள

ஆல் = ஆலமரத்தில்

ஏறு உண்ட = ஏறியிருந்த

கணை = அம்பை

அருகு = அருகில்

ஒதுங்கும் = ஒதுங்கி இருந்த

பார்ப்பனியைக் = பார்பனப் பெண்ணை

காற்றுஆல் = காற்றினால்

வீழ்த்து = விழச் செய்து

எவ்வாறு கவர்ந்தோம் = எப்படி கவர்ந்தோமோ

அப்படி = அப்படி

இந்தச் = இந்த

சாற்று ஆரவாரத்தில் = பெரிய ஆரவாரத்தில்

தாம்பு அறுத்துப் = கட்டியிருக்கும் கயிற்றை அறுத்து

புறம் நின்ற = வெளியே நிற்கும்

ஈற்று ஆவை = கன்றை ஈன்ற பசுவை

வெருள = பயந்து ஓடும்படி

விடுத்து = செய்து

இவன் ஆவி  = இவனுடைய ஆவியை

கவர்க  என்றான் = கவர்ந்து கொள்வோம் என்றான்.


"ஆற்று ஆல் ஏறு உண்ட கணை" என்ற வரியில், ஆற்று என்ற சொல் வருகிறது. 

ஆறு என்றால் வழி. 


ஆற்றுப் படை என்று ஒரு பாடல் வகை உண்டு.  அதாவது, ஒரு தலைவனிடம் நன்மையைப் பெற்ற ஒருவன், மற்றவனை அதே வழியில் சென்று நன்மை அடைய வழி காட்டுவது. 

ஒரு புலவன் அரசனை பாடி பரிசு பெற்றால், மற்ற புலவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்லி அவர்களை  ஆற்றுப் படுத்துவது.

நக்கீரர் முருகன் அருள் பெற்றார். மற்றவர்களும் முருகன் அருள் பெற வழி சொல்லித் தந்த பாடல்களுக்கு  திருமுருகாற்றுப் படை என்று பொருள். 

சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை என்று பாடல்கள் உண்டு. 


கதை எப்படி போகிறது என்று பாருங்கள். 


திருமண வீடு. மணமகன் சாகப் போகிறான். எப்படி இருக்கும் ? ஒரு படபடப்பு  நமக்குள் வருகிறது அல்லவா ? 

வாசிக்கும் நமக்குத் தெரியும்.  அங்குள்ள யாருக்கும் தெரியாது. 

அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம் 

Monday, September 9, 2019

இனிக்கும் தமிழ் - 100

இனிக்கும் தமிழ் நூறாவது பதிவு இது.
இனிக்கும் சங்கப்பாடல்கள் பல ஆயிரம் கொட்டிக் கிடக்கின்றன.அவற்றுள் சிலவற்றை, கடந்த சில மாதங்களாக வழங்கி வந்தேன்.

இன்றுடன் இப்பணிக்கு சற்றே ஓய்வு கொடுக்க எண்ணியுள்ளேன்.

இன்றைய பதிவில்..

இனிக்கும் தமிழ் என பெயரிடப்பட்டு, மீசைக்கவிஞனின் பாடல் ஏதும் இல்லையெனில் அது முழுமையாக நிறைவு பெற்றதாக ஆகாது.

ஆகவே..செந்தமிழ் நாடு எனக் கேட்டதுமே தேன் பாய்கிறது காதுகளில் என்ற கவிஞன்..தமிழ்நாட்டின் பெருமைகளைப் பாடுவதுடன் இத்தொடர் நிறைவுபெறுகிறது.

இதைத்தொடர்ந்து படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு 

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு 

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு 

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு 

Saturday, September 7, 2019

இனிக்கும் தமிழ்

பட்டினத்தார் பாடல் ஒன்று


பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆற்றில் விழுந்து விட்டோம். அடித்துச் செல்லப் படுகிறோம். இருந்தும் கரை எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று பட்டினத்தார் நம்மைப் பார்த்து பரிதாபப் படுகிறார். 

இப்படி, எதற்காகச் செய்கிறோம் என்று அறியாமல் அலைபவர்களைப் பற்றிய பாடல்

பாடல்


நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே 
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் 
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்? 
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே !

பொருள் 

நீற்றைப் புனைந்தென்ன? = திரு நீற்றை பூசி என்ன ? 

நீராடப் போயென்ன? = கங்கை முதலான புனித தீர்த்தங்களில் நீராடி என்ன பயன் ?

நீ மனமே = நீ மனமே

மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை = மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கும் இந்த நிலையை மாற்றி பிறக்கும் வகையை நீ அறியவில்லை.

மாமறைநூல்  = பெரிய மறை நூல்களில்

ஏற்றிக் கிடக்கும் = எழுதப்பட்டு இருக்கும்

எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?  = கோடிக்கணக்கான மந்திரங்களை படித்தும் நீ என்ன கண்டாய் (ஒன்றும் காணவில்லை )

ஆற்றில் கிடந்தும் = ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும்

துறையறி யாமல் அலைகின்றையே ! = படித்துறை அறியாமல் அலைகின்றாயே

Friday, September 6, 2019

இனிக்கும் தமிழ்

கம்ப இராமாயணம் 


இரவு..

இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது. 

சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை. 

அது போல

இராமா, 

இதுவரை எப்படியோ தெரியாது, 

ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன்.

எங்கே ?

இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.
மிக மிக அருமையான பாடல், ஆழமான பாடலும் கூட....


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இவ்வண்ணம் = இந்த மாதிரி

நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்த பின். அகலிகை சாப விமோசனம் பெற்ற பின்

இனி. = இனிமேல்

இந்த உலகுக்கு எல்லாம் = இந்த உலகத்திற்கு எல்லாம்

உய்வண்ணம் அன்றி = உய்யும் வழி அன்றி

மற்று ஓர் = வேறு ஒரு

துயர் வண்ணம் = துயரங்கள்

உறுவது உண்டோ? = நேர்வது உண்டோ? (கிடையாது)

மை வண்ணத்து = மை போன்ற கரிய நிறம் கொண்ட
அரக்கி =அரக்கி (தாடகை)

போரில்.= சண்டையில்

மழை வண்ணத்து அண்ணலே! = மழை முகில் போன்ற கரிய நிறம் கொண்ட அண்ணலே

உன் = உன்னுடைய

கை வண்ணம் = கை வண்ணமாகிய வில்லாற்றலை

அங்குக் கண்டேன் =அங்கு கண்டேன்

கால் வண்ணம் = சாப விமோசனம் தரும் திருவடியின் வண்ணத்தை

இங்குக் கண்டேன் = இங்கு கண்டேன்


இதில் என்ன ஆழம் என்று கேட்கறீர்களா? எழுதியவன் கம்பன்...


பாடலில் எத்தனை வண்ணம் ?

இவ்வண்ணம்
நிகழ்ந்த வண்ணம்
உய்வண்ணம்
துயர் வண்ணம்
மை வண்ணம்
மழை வண்ணம்
கை வண்ணம்
கால் வண்ணம்

மொத்தம் எட்டு வண்ணம். இறைவனை எண்குணத்தான் (எட்டு குணம் உள்ளவன் என்று சொல்வது மரபு).

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

என்பார் வள்ளுவர்.

அது என்ன கை வண்ணம், கால் வண்ணம் ?

ஒருவர் மேல் அன்பு செலுத்தும் போது நாம் கையை உபயோகப் படுத்துகிறோம்...அணைப்பது, கட்டி கொள்வது, கையேடு கை பின்னிகொள்வது போன்ற அன்பின் வெளிப்பாடுகளாய்

ஒருவர் மேலோ அல்லது ஒன்றன் மேலோ கோவமோ வெறுப்போ வரும்போது அதை காலால் எட்டி உதைக்கிறோம்

அன்புக்கு கை, வெறுப்புக்கு கால்.

ஆனால் இராமனோ, கோவம் கொண்ட அரக்கியின் மேல் கை வண்ணம் காண்பித்தான், அன்பு கொண்ட அகலிகை மேல் கால் வண்ணம் காட்டினான்.

விஸ்வாமித்திரன் ஆச்சரியப் படுகிறான்.

வண்ணம் வண்ணம் என்று சொல்லிக் கொண்டு வந்த கம்பன், அரக்கியயையும் இராமனையும் வண்ணமயமாகவே வருணிக்கிறான்.

மை வண்ணத்து அரக்கி, மழை வண்ணத்து அண்ணலே என்று.

பொய், சூது, கொலை போன்ற கெட்ட குணங்களால் நிறைந்ததால் மை போன்ற கரிய நிறத்து அரக்கி.

பிறருக்கு கொடுப்பதற்காகவே நீர் கொண்டு கருத்ததால் மழை மேகம் கருக்கிறது.. எனவே அந்த கரு மேகம் இராமனின் கருமைக்கு உதாரணம்
இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் இடம் மாறுகிறது.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்இனிஇந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் இன்றிமற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்மழை வண்ணத்து அண்ணலேஉன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்கால் வண்ணம் இங்குக் கண்டேன்!--  4

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்

Thursday, September 5, 2019

திரு அருட்பா - கேட்பதற்கு முன்னே பாவ மன்னிப்பு

...

நாம் ஏதோ பாவம் செய்துவிட்டோம்.பின்னர் நம் தவறினை எண்ணி வருந்தி, அதற்கு இறைவனிடம் மனதார மன்னிப்புக் கேட்க எண்ணுகின்றோம்.

அப்படிப்பட்ட நிலையில் நாம் மன்னிப்புக் கேட்கும் முன்னரே இறைவன் நம்மை மன்னித்துவிடுவானாம்...

வள்ளலார் சொன்னதைப் பாருங்கள்..

இறைவனிடம் சென்று, தான் செய்த பாவங்களை சொல்லி, "மன்னித்துக் கொள், இனிமேல் இப்படி செய்ய மாட்டேன்" என்று சொல்வதர்க்கு முன்னேயே அவன் மன்னித்தது மட்டும் அல்ல...கருணையும் பொழிந்தான்...அதற்கு என்ன கை மாறு செய்வேன் என்று உருகுகிறார் வள்ளலார்....

பாடல் 

தனியே கிடந்து மனங்கலங்கித் தளர்ந்து தளர்ந்து சகத்தினிடை
இனியே துறுமோ என்செய்வேன் எந்தாய் எனது பிழைகுறித்து
முனியேல் எனநான் மொழிவதற்கு முன்னே கருணை அமுதளித்த
கனியே கரும்பே நின்தனக்குக் கைம்மா றேது கொடுப்பேனே

பொருள் 

தனியே கிடந்து = தனியாகக் கிடந்து 

மனங்கலங்கித் = மனம் கலங்கி

தளர்ந்து தளர்ந்து = மீண்டும் மீண்டும் தளர்ந்து 


சகத்தினிடை = இந்த உலகத்தில்

இனியே துறுமோ = இனி ஏதுருமோ = இனி என்ன நிகழுமோ

என்செய்வேன் = என்ன செய்வேன்

எந்தாய் = என் தாய் போன்றவனே

எனது பிழைகுறித்து = எனது குற்றங்களை குறித்து

முனியேல் = கோவித்துக் கொள்ளாதே

எனநான் = என்று நான்

மொழிவதற்கு முன்னே = சொல்வதற்கு முன்னே

கருணை அமுதளித்த = உன் கருணை என்ற அமுது அளித்த 

கனியே = கனியே

கரும்பே = கரும்பே

நின்தனக்குக் = உனக்கு

கைம்மா றேது கொடுப்பேனே = கை மாறாக என்ன தருவேன் ? (ஒன்றும் தர முடியாது என்பது பொருள்) 

Wednesday, September 4, 2019

இனிக்கும் தமிழ்



சித்தத் தொகை திருக்குறுந்தொகை.தேவாரத் திருப்பதிங்களில் மிகவும் அதிகமான (முப்பது) பாடல்களைக் கொண்ட பெருமை உடையது இந்த திருப்பதிகம். தன்னைப் பற்றி சிந்திக்கும் மனதினை உடைய அடியார்கள் என்று இந்த பதிகம் தொடங்கப் பெறுவதால் சித்தக் குறுந்தொகை என்ற பெயர் வந்தது. இங்கே சித்தம் என்ற சொல் மனதினை குறிக்கின்றது. இந்த பாடலின் மற்றொரு சிறப்பு, பன்னிரண்டு உயிரெழுத்துகள், ஆய்த எழுத்து, மற்றும் பதினெட்டு மெய்யெழுத்துகள் ஒவ்வொரு பாடலிலும் முதலில் வரும் வண்ணம் சொற்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதே சமயத்தில் தமிழ் மொழியின் இலக்கண வரம்பினை மீறாத வண்ணம் இந்த பாடல்கள் அமைந்துள்ளன. தமிழ் இலக்கண விதியின் படி எந்த சொல்லிலும் முதலில் வாராத ட, ண, ய. ழ, ற,. ன ஆகிய எழுத்துக்களை, அகர இகரங்களை இணைத்து சொற்களாக்கி பாடலைத் துவக்கியுள்ளார்.

அதே போல்..

"ஙப் போல் வளை , 

ங என்ற எழுத்தை முதல் எழுத்தாக கொண்டு தமிழ் பாடல்கள் உள்ளதா என்று ஆராயும் போது அவ்வையின் ஆத்திச்சூடி தவிர்த்து திருநாவுக்கரசர் தம் பாடலில் பாடலின் முதல் எழுத்தாக பயன் படுத்தி உள்ளார் இப்பதிகத்தில்.

பெருமானின் திருவருளினால், நந்தி படுத்திருக்கும் நிலை ங எழுத்தினை ஒத்திருக்கும் தன்மையினை அப்பர் பிரான் உணர்ந்தார் போலும். எங்கும் எதிலும் பெருமானையோ பெருமானைச் சார்ந்த பொருட்களையும் காணும் அப்பர் பிரானுக்கு ங என்ற எழுத்தின் அமைப்பு, நந்தி படுத்திருக்கும் நிலையினை உணர்த்தவே, அந்த எழுத்தினையே நந்தியம்பெருமானாக உருவகித்து, நந்திக் கொடியினை உடைய பெருமான் என்பதற்கு பதிலாக ஙகர வெல்கொடியான் என்று பெருமானை அழைக்கின்றார்.

ஙகர வெல் கொடியானொடு நன்னெஞ்சே
       நுகர நீ உனைக்கொண்டு உயப் போக்குறில்
       மகர வெல்கொடி மைந்தனைக் காய்ந்தவன்
       புகரில் சேவடியே புகலாகுமே
விளக்கம்:
வெல்கொடி=எவரையும் வெல்லும் கொடி; ஙகர=ங எழுத்தினைப் போன்று படுத்த  நிலையில் இருக்கும் இடபம்; மகர வெல்கொடி மைந்தன்=மீனைத் தனது கொடியின் சின்னமாக வைத்துள்ள மன்மதன்; பெருமானிடம் மட்டுமே தோல்வி கண்ட மன்மதன், ஏனையோரிடம் வெற்றி பெற்றமையால் வெல்கொடி என்று மன்மதனின் கொடியை அப்பர் பிரான் இங்கே குறிப்பிடுகின்றார்.

பொழிப்புரை:

நல்ல நெஞ்சமே, ங என்ற எழுத்தினை நினைவூட்டும் வகையில் படுத்திருக்கும் இடபத்தின் சித்திரத்தைத் தனது கொடியினில் ஏந்திய பெருமானின் நினைவுகளை அனுபவித்து உனது வாழ்க்கையை உய்யும் வகையில் செலுத்த வேண்டும் என்று நீ விரும்புவாயாகில், முற்றும் துறந்தவர்களையும் காமத்தில் ஆழ்த்தி வெல்லும் திறமை உடையவனும் மீன் கொடியினை உடையவனும் ஆகிய மன்மதனை விழித்து எரித்த சிவபெருமானது குற்றமற்ற திருவடிகளே புகலிடம் என்று கொள்வாயாக

Monday, September 2, 2019

இனிக்கும் தமிழ்

நன்னெறி - வாழ்க்கை என்னும் அதிசயம் 


வாழ்வின் ஒவ்வொரு நொடியும் ஒரு மிகப் பெரிய அதிசயம்.

மூச்சுக் காற்று வந்து போய்க் கொண்டிருக்கிறதே..

பிறந்தது முதல் ஓய்வின்றி இதயம் துடித்துக் கொண்டிருக்கின்றதே..

தன்னிச்சையாகத் தானே இவை செயல்படுகின்றன 


ஒவ்வொரு வினாடியும் இந்த உடலில் உயிர் உலவுவது மிகப் பெரிய அதிசயம் இல்லையா?


ஒன்பது வாயில்கள் இந்த உடலில். ஒன்றுக்கும் பூட்டு கிடையாது. 

காயமே இது பொய்.இது வெறும் காற்றடைத்தப் பை.ஒரு பலூன் போல..
இந்த ஓட்டை பலூனில் காற்று நிற்பது அதிசயமா , காற்று இறங்கிப் போவது அதிசயமா ?

பாடல்

வருந்தும் உயிர்ஒன்பான் வாயில் உடம்பில் 
பொருந்துதல் தானே புதுமை - தீருந்திழாய்
சீதநீர் பொள்ளல் சிறுகுடத்து நில்லாது
வீதலோ நிற்றல் வியப்பு.






பொருள்

வருந்தும் உயிர் = வருத்தப் படும் உயிர்

ஒன்பான் வாயில் உடம்பில் = ஒன்பது வழிகளை கொண்ட உடலில்

பொருந்துதல் தானே புதுமை = பொருந்தி இருப்பதுதானே புதுமை

தீருந்திழாய் = அழகான பெண்ணே

சீத நீர் = குளிர்ந்த நீர்

பொள்ளல் = ஓட்டை உள்ள 

சிறுகுடத்து = சின்ன குடத்தில்

நில்லாது = நிற்காமல்

வீதலோ  = ஒழுகிப் போவதோ

நிற்றல் = ஒழுகாமல் நிற்பதோ

வியப்பு = ஆச்சரியம் ?

Sunday, September 1, 2019

இனிக்கும் தமிழ்

எல்லா பெண்களும் அரசிகள்தான்.

அவர்கள் எந்த நாட்டுக்கு அரசிகள் ? அவர்களின் படைகள் என்ன, அவர்களின் வெண் கொற்ற குடை எது ?

நள வெண்பா பாடிய புகழேந்திப் புலவர் கூறுகிறார்....

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்ற நான்கு வித குணங்களே நான்கு விதமான படைகள் (இரதப் படை, யானைப் படை, குதிரைப்படை , காலாட்படை) , ஐந்து புலன்களும் அவர்களை வழி நடத்தும் அமைச்சர்களாக, இரண்டு கண்களும் வில்  படையும்,வேல் படியுமாக, அவர்களின் அழகிய முகமே வெண்கொற்றக் குடியாக பெண்மை அரசு செய்கிறது....


பாடல்

நாற்குணமும் நாற்படையா ஐம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்கும் சிலம்பே அணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை அரசு.