Friday, February 27, 2015

இனிக்கும் தமிழ்-12



பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

(கவியரசு வைரமுத்துவின் 'நிலத்தை ஜெயித்த விதை' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ள வைர வரிகள் மேலே குறிப்பிட்டுள்ளவை)

Wednesday, February 25, 2015

இனிக்கும் தமிழ்-11




நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..

நம் எண்ணங்கள் எள்ளி நகைக்கப்படுகின்றன..

இந்நிலையில் நாம் என்ன செய்வோம்...

ஒன்று நம்மை புரியாதவர்களிடமிருந்து பிரிவோம்..

அல்லது..இவர்கள் எப்படிப் போனால் என்ன..நம்மை விரும்புபவர்களும் இருக்கிறார்களே..என மகிழ்வோம்..

அல்லது..இவர்களிடமிடுந்து விலகி..இவர்கள் கண் காணா இடத்திற்கு செல்வோம்..

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது.சோழ மன்னனிடம் ஏற்பட்ட சிறு பிணக்கு காரணமாய்..அவனால் அவமானப் படுத்தப்பட்டு..அந்த நாட்டை விட்டே போக எண்ணிய கம்பன்..மன்னனைப் பார்த்து..கீழ் கண்ட பாடலைப் பாடுகிறான்..

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதுவோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு



நீயும் ஒரு மன்னனா..இந்த நாடு உனக்கு சொந்தமா..நீ இருக்கிறாய் என்ற எண்ணத்திலா நான் தமிழ் பாடும் கவிஞன் ஆனேன்..கவிஞனான என்னை எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்நாட்டு மன்னர்கள் விரும்பி வரவேற்பார்கள்..எப்படி..ஒரு குரங்கை..மரத்தின் சிறு கிளையும் தாங்குகிறதோ..அதுபோல மன்னர்கள் என்னை தாங்குவர்..என்கிறான்.
..


இதையே ஔவையார் மூதுரையில் இப்படிச் சொல்கிறார்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

ஒரு நாட்டு மன்னன், கல்வி அறிவு படைத்தவன்..இவர்களில் யார் சிறந்தவன் என்று பார்த்தால்..கற்றவனே சிறந்தவன்..ஒரு நாட்டு மன்னனுக்கு அவன் நாட்டில்தான் மதிப்பு, சிறப்பு..அந்நாட்டை விட்டு வெளியேறினால்..மன்னன் சாதாரணமானவன்.ஆனால்..கல்வி அறிவாளிக்கு,அவன் எந்த நாட்டில் இருந்தாலும், அங்கு எந்த இடத்திற்குச் சென்றாலும் சிறப்புடையவனாகக் கருதப் படுவான்

Tuesday, February 24, 2015

இனிக்கும் தமிழ் - 10



வள்ளுவனின் சொல் விளையாட்டுகளை கீழ்கண்ட குறள்களில் இந்த இடுகையில் காணலாம்..
ஆற்றுதல் என்னும் சொல்லை வைத்து ஈகை அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக அவர் சொல்வது என்ன பார்க்கலாம்.

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

பசியைப் பொறுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறந்தது என அதைக் கடைப்பிடிப்பதைவிடப் பசியோடிருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

அடுத்து..ஒருவர் மீது ஏற்படும் பழியை விடக் கொடுமையானது..அவர் வாழ்வில் வேறேதும் இருக்க முடியாது.புகழ் அதிகாரத்தில் இதையே வசை,இசை,வாழ்வார் போன்ற சொற்களால் விளையாடியுள்ளார்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பழி உண்டாகாமல் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை எனப்படும்.புகழ் இல்லாதவர் வாழ்வதும்,வாழாததும் ஒன்று போலத்தான்

தவம் அதிகாரத்தில் பத்தாவது குறள் இது.இலர்,பலர்.சிலர் என வள்ளுவனின் விளையாட்டு இக்குறளில்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும்..உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்..

அடுத்து அவனது சொல்விளையாட்டு..இறந்தார்,துறந்தார் என்பதை வைத்து.வெகுளாமை யில் கடைசி குறள்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற சினம் கொள்பவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள்.சினத்தை அறவே துறந்தவர் முற்றும் துறந்த துறவிக்கு ஒப்பாவர்.

Monday, February 23, 2015

இனிக்கும் தமிழ் -9



சிலேடைப் புலவர் காளமேகத்திடம் 'த' என்ற எழுத்து மட்டும் வருமாறு பாடல் ஒன்றைப் பாடச் சொல்ல அவர் பாடிய பாடல்



தத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி
துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி
தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த
தெத்தாதோ தித்தித்த தாது?

தத்தி தாவி பூவிலிருக்கும் தாதுவாகிய மகரந்தத் தூளை திண்ணும் வண்டே, ஒரு பூவினுள் உள்ள தாதுவை உண்ட பின் மீண்டும் ஒரு பூவினுக்குள் சென்று தாதெடுத்து உண்ணுகிறாய், உனக்கு (எத்தாது) எந்தப் பூவிலுள்ள தேன் (இனித்தது) தித்தித்தது?)

அடடா....பாடல் முழுதுமே இனிக்கிறதே

Sunday, February 22, 2015

இனிக்கும் தமிழ்-8



சாதாரணமாக காதலன் தன் மனம் கவர்ந்தவளைக் காணும் இடம் இன்று பெரும்பாலும் கடற்கரைகளே..
கடல் இல்லாத இடங்களில்..பூங்காக்கள் போன்ற மக்கள் கூடும் இடங்கள். அவர்களுக்குத் தனிமை தேவைப்பட்டாலும்..இது போன்ற இடங்களுக்கு வருவோர் பெரும்பாலும்..தான், தன் துணை,தன் குடும்பம் தவிர வேறு பக்கங்களில் பார்வையை ஓட்டுவதில்லை.
காதலன் தன் காதலி எங்கு வருவாள்..அவளை எங்கு சந்தித்தால் உரையாடலாம் என்று தெரியாது அவளது நெருங்கிய தோழியிடம் கேட்கிறான்..'உன் நண்பியை எங்கு சந்திக்கலாம்..அவள் எங்கிருப்பாள்?' என்றெல்லாம்.
அந்தக் காதலியின் தோழி சற்று குறும்புக்காரியாய் இருப்பாள் போலிருக்கிறது..'நேரடியாக பதில் சொல்லாமல்..அவனை சற்று சுற்றியடிக்கக நினைக்கிறாள்..ஆகவே அவனுக்கான பதிலை ஒரு விடுகதையைப் போல சொல்கிறாள்.

ஊர்க்கும் அணித்தே பொய்கை பொய்கைக்குச்
சேய்த்தும் அன்றே சிறுகான் யாறே
இரைதேர் வெண்குரு கல்ல தியாவதும்
துன்னல்போ கின்றாற் பொழிலே யாமெம்
கூழைக் கெருமண் கொணர்கஞ் சேறும்
ஆண்டும் வருகுபவள் பெரும்பே தையே

ஊருக்கு அருகே பொய்கை உள்ளது.சிறு காட்டாறு அப்பொய்கைக்குத் தூரத்தில் இல்லை (அருகே உள்ளது).அவ்வாற்றில் தன் இரையத் தேடும் நாரைகளைத் தவிர வேறு யாரும் வருவதில்லை (தனிமைப் பிரதேசம்)நாங்கள் எங்கள் கூந்தலுக்கு செங்கழுநீர் பூக்கள் பறிக்க அங்கு செல்வோம்.பெரும் பேதமைக் கொண்ட அவள் அங்கும் வருவாள்..என்கிறாள் தோழி.

அதாவது காதலி அந்த இடத்திலும். என உம் போட்டாலும்..அவள் அங்குதான் இவருக்காக காத்திருப்பாள் என பொருள் பட சொல்கிறாள்.ஆற்றங்கரைக்குச் சென்றால் அவளைக் காணலாம் என்ற பதிலை நேரடையாகச் சொல்லவில்லை.

இப்பாடல் குறுந்தொகையில் தோழிகூற்று (மருதம்)..113ஆம் பாடல்..ஆசிரியர்-மாதீர்த்தனார்)

Friday, February 20, 2015

இனிக்கும் தமிழ் - 7




அருணாசலக் கவிராயர்

அருணாசலக் கவிராயரின் ராம நாடகத்தில் இன்பச்சுவைக்கு அளவே இல்லை.

திருமணப்பந்தலில் அழகு வாய்ந்த சீதை வருகிறாள்.ராமன் சிவதனுசை வளைக்கக் காத்திருக்கிறான்.மண்டபத்தில் கூடியுள்ள மக்கள் 'மங்கையர் கட்டழகில் மயங்கிய காதலர்க்கு உலகில் முடியாத செயலும் உண்டோ?காதலியின் பேரழகை நினைத்தால் புதிய வலிமை உண்டாகுமே..நள்ளிரவில் பாம்பையும் பழுதையென நினைத்துப் பார்த்து ஏறி தம் காதலியை அடையும் காதலர் எத்தனை பேர்?அவ்வாறிருக்க சீதையின் பேரழகில் மயங்கிய ராமன்..இந்தச் சிறு வில்லை மட்டுமா ஒடிப்பான்? ஏழுமலையையும் கொடுத்தாலும் பிடித்து, எடுத்து ஒடிப்பானே' என்கின்றனர்.

மூவுலகமும் செலுத்தும் ராவணனுக்குப் பண்டு
முத்தி கொடுக்கவந்த சித்திர வடிவைக்கண்டு
தேவியிவள் என்றாள் ராகவன் இந்தச் சின்ன
சிலையோ ஒடிப்பான் ஏழுமலையும் ஒடிப்பான் என்ன
-ராம நாடகம்

என்பது சீதையிடம் ராமன் கொண்ட காதலின் பெருமையைக் கவிஞர் சுவைபடத் தீட்டும் கவிச்சித்திரமாகும்.

சீதை ராமனிடம் கொண்ட காதலையும் நாடகத்தமிழுக்கு ஏற்ப கவிராயர் சுவைப் படக் கூறுகிறார்.

ராமன் தன் சிற்றன்னையின் கட்டளையைத் தலைமேற்கொண்டு வனம் செல்ல ஆயத்தமாகிறான்.தனது பிரிவைத் தன் காதலி சீதைக்கு உணர்த்துகிறான்.

தலைவனைப் பிரிந்து தான் உயிர் வாழ இயலாத காதல் நிலையை...

செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின்
வல்வரவு வாழ்வார்க் குரை

-திருக்குறள்
பிரிந்துசெல்வதில்லை என்றால் அந்த மகிழ்ச்சியான செய்தியை என்னிடம் சொல்..நீ போய்த்தான் தீரவேண்டுமாயின்..நீ திரும்பிவரும்போது யார் உயிருடன் இருப்பார்களோ அவர்களிடம் சொல்லிவிட்டுச் செல்...என்கிறாள் திருக்குறள் தலைவி தன் தலைவனிடம் குறிப்பாக .

ஆனால் கவிராயரோ மேலும் ஒரு படி செல்கிறார்..

தான் தலைவனைப் பிரிந்து வாழ இயலாத காதல் மிகுதியை சீதை புலப்படுத்துவதுடன் மற்றொன்றும் கூறுகிறாள்..

என்னைப் பிரிந்துசெல்லத் துணிந்தீர்..ஆயின் நீர் பிரிந்து சென்று தங்கும் காட்டின் பெயரையேனும் எனக்குக் கூறிச் செல்லுங்கள்.நீர் பிரியின் நான் இறப்பது உறுதி.இறப்பின் மீண்டும் பிறப்பது உறுதி நீர் பிரிந்துறையும் காட்டின் பெயரை அறிவிப்பின் அதனை நினைத்துக் கொண்டே நான் இறக்க நேரும்.அப்படி பெயரை நினைத்துக் கொண்டே இறந்தால் அதே காட்டில் மீண்டும் பிறந்து உங்களை அடைந்து மகிழ்வேன்..என்கிறாள்

நாடிநீர் போயிருக்கும் வனத்தின்பேர்
சொல்லவேணும் - அதை
நான்நினைத்துக் கொண்டிறந்தால்
அங்கே பிறக்க லாங்காணும்
-ராமநாடகம்

என்பது கவிராயர் படைத்த சீதையின் காதல்மொழி..

Thursday, February 19, 2015

இனிக்கும் தமிழ்-6


ஒருவரிடம் நட்பு கொண்டு விட்டோம்..ஆனால் நாளாக ஆக அந்த நண்பரின் சுயரூபம் தெரிகிறது.ஆனால் அந்த நட்பை முறித்துக் கொள்ள இயலாதவாறு ஒரு நிலையை உருவாக்கி விட்டான் அந்த நண்பன்.இப்போது அவனை விட்டு விலகினால் உங்களுக்கு ஆபத்து..

இதையெல்லாம் எப்படி தவிர்ப்பது..?

ஒருவரிடம் நட்பு பாராட்டுமுன் அவரைப் பற்றி நாம் அறிந்திருக்க வேண்டும்..அதைச் செய்யாமல் நண்பனாகி விட்டால் அது தீய நட்பாக அமையும் வாய்ப்பும் இருக்கிறது.

இதைத்தான் வள்ளுவர் சொல்விளையாட்டுடன் நட்பாராய்தல் அதிகாரத்தில் முதல் குறளாகச் சொல்லியுள்ளார்.



நாடாது நட்டலிற் கேடில்லை நட்டபின்

வீடில்லை நட்பாள் பவர்க்கு

என்கிறார்..ஆராய்ந்து பாராமல் கொண்டிடும் தீய நட்பு, அந்த நட்பிலிருந்து விடுபட முடியாத அளவிற்குக் கேடுகளை உண்டாக்கும் என்பதே இதன் பொருள்.

புல்லறிவாண்மை அதிகாரத்தில் ஒன்பதாம் குறளைப் பார்ப்போம்..

ஒரு முட்டாள் இருக்கிறான்.அவனுக்குத் தெரிந்ததை மட்டுமே வைத்துக் கொண்டு அறிந்தோரிடம், தனக்கும் எல்லாம் தெரியும் போல நடந்துக் கொள்கிறான்.அவனை அறிவுடையோன் ஒருவன் அறிவுடையவனாக்க முயற்சிக்கிறான்..அந்த சமயத்தில் அறிவுடையோனும், அறிவற்றவனாகவே தன்னை ஆளாக்கிக் கொள்ள நேரிடும்..

உதாரணத்திற்கு..சேறும் சகதியுமான இடத்தில்..தண்ணீர் தேங்குமாயின் அதுவும் சேற்றின் நிறம் அடையும்..(செம்புலப்பெயல் நீர்),இதில் சேறு அறிவற்றவன்..தண்ணீர்.. அறிவுடையவன்.இப்போது இந்த குறளைப் படியுங்கள்..



காணாதான் காட்டுவான் தான்காணான் காணாதான்

கண்டானாம் தான்கண்ட வாறு



காணாதான்,காணான்,காணாதான்,கண்டானாம்,கண்டவாறு..அடடா..சொல்லழகும்,சொல் விளையாட்டும் ..இந்த ஒன்றே முக்கால் அடியில்..இது வள்ளுவனன்றி வேறு யாரால் முடியும்!!!!

இதன் பொருள்- அறிவற்ற ஒருவன், தான் அறிந்ததை மட்டும் வைத்துக் கொண்டு, தன்னை அறிவுடையவனாகக் காட்டிக் கொள்வான்.அவனை உண்மையிலேயே அறிவுடையவனாக்க முயற்சி செய்பவன் தன்னையே அறிவற்ற நிலைக்கு ஆளாக்கிக் கொள்வான்

அடுத்து...

நமக்கு நெருங்கிய உறவினர்..அவர் நம்மிடம் மிகவும் அருமையாக உறவுடன் இருப்பது போலக் காட்டிக் கொண்டாலும், மனதிற்குள்..நம்மைப் பற்றி வன்மம் பாராட்டுகிறார்..இப்படியிருப்பதால் நமக்கு என்றேனும் ஒருநாள் அவரால் கேடு உண்டாகும்..இதற்கு உதாரணம் சொல்வதானால்...இப்போதெல்லாம் ஒரு ரூபாய்க்கு தண்ணீர் பாக்கெட் கிடைக்கிறது.வெயிலில் அலையும் நாம் தாகத்திற்கு அதை வாங்கி அருந்துகிறோம்.அது பார்க்க தெளிவாக, இனிமையாகத் தெரிந்தாலும்..அந்த நீர் சாக்கடைக்கு அருகில் இருக்கும் குழாய் ஒன்றிலிருந்து அப்படியே பிடித்து அடைக்கப் பட்ட கிருமிகள் அதிகம் உள்ள நீர்.இதை அருந்துவதால் தீமைதான் உடலுக்கு உண்டாகும்.அதே போன்றதுதான் சுற்றத்தினர் உட்பகையும்..தீங்கு விளைவிக்கும்.

இதையே உட்பகை என்னும் அதிகாரத்தில் முதல் குறளில் சொல்கிறார்...

நிழல்நீரும் இன்னாத இன்னா தமர்நீரும்

இன்னாவாம் இன்னா செயின்



நீர் என இரு இடங்களிலும், இன்னா என்பது நான்கு இடத்திலும் சொல்லி சொல் விளையாட்டு விளையாடுகிறார் வள்ளுவர்.

இதன் பொருள்- இனிமையாகத் தெரியும் நிழலும் நீரும் கூடக் கேடு விளைவிக்கக் கூடியதாக இருந்தால் அவை தீயவைகளாகவே கருதப்படும்.அது போலவேதான் உற்றார் உறவினராக உள்ளவர்களின் உட்பகையும் ஆகும்..

இனிக்கும் தமிழ் - 5



சாதாரணமாக கவிஞர்கள் அந்த நாளில் அரசனைப் பாடிப் பொன்னும் பொருளும் பெறுவர்.வறுமையில் அவர்கள் வாடினாலும், அவர்களின் தமிழில் பாடப்படுபவரைப் பற்றி நக்கலும், கிண்டலும் கூட இருக்கும்.அப்படி, பாடி பரிசு பெற எண்ணி அரசன் ஒருவனை இராமசந்திர கவிராயர் பாடுகிறார்.(இவர் 19ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்).  பாடி முடித்ததும் அந்த அரசன் பரிசு ஏதும் தரவில்லை.அந்த மனச் சலிப்பை இப்பாடல் மூலம் வெளிப்படுத்துகிறார்.

கல்லாத வொருவனைநான் கற்றா யென்றேன்
காடெறியு மறவனைநா டாள்வா யென்றேன்
பொல்லாத வொருவனைநா னல்லா யென்றேன்
போர்முகத்தை யறியானைப் புலியே றென்றேன்
மல்லாரும் புயனென்றேன் சூம்பற் றோளை
வழங்காத கையனைநான் வள்ள லென்றேன்
இல்லாது சொன்னேனுக் கில்லை யென்றான்
யானுமென்றன் குற்றத்தா லேகின் றேனே !



(கல்லாத ஒருவனை நான் மெத்தப்படித்த மேதை என்றேன்;
காட்டை அழைத்துச் செழிக்கும் ஒருவனை நாடாளும் மன்னனே என்றேன் ;
தீயவனை நல்லான் என்று புகழ்ந்துரைத்தேன் ;
போர்க்களத்தையே பார்த்திராத கோழையை வேங்கையை ஒத்த வீரன் என்றேன்;
சூம்பிய தோள்களைக் கொண்ட நோஞ்சானை மல்யுத்தத்துக்கு ஏற்ற திடம் கொண்ட தோளன் என்றேன்;
எச்சில கையால் காகம் ஓட்டாதவனை வள்ளல் என்றேன்;
இப்படி இல்லாததைச் சொல்லி புகழ்ந்த எனக்கு, அவன் இல்லை எனச் சொல்லி விட்டான்).

Wednesday, February 18, 2015

இனிக்கும் தமிழ் - 4



சங்கத் தமிழ்ப் பாடல்கள்...ஒவ்வொன்றும் ரசிக்கத்தக்கவை...இலக்கியச் சுவை மிக்கவை.அவற்றில் ஒன்று கம்பர் எழுதியது.இந்த கம்பர் ராமாயணம் பாடியவரா எனத் தெரியவில்லை.

பாடலை ரசியுங்கள்..

பொன்னி வளநாட்டில் மாத்தத்தன் என்கிற அழகன். அவனது அழகில் மயங்கி, அவன் மீது காதலுற்ற காரணத்தால் மங்கையர்தம் மேனி மெலிய, அவர்கள் அணிந்திருந்த வளையல் கழன்றனவாம். இதை, (சொற்பொருட் பின்வருநிலை அணி எனும் இலக்கணப்படி) "வளை" எனும் வார்த்தையை வைத்துக்கொண்டு விளையாடுகிறார் கவிஞர்.

"இருந்தவளை போனவளை என்னை அவளைரார்
 பொருந்த வளைபறித்துப் போனான் - பெருந்தவளை
 பூத்தத்தத் தேன்சொரியும் பொன்னிவள நன்னாட்டில்
 மாத்தத்தன் வீதியில் வந்து."


சின்னவளை முகம் சிவந்தவளை நான் சேர்த்துக்கொள்வேன் வளையிட்டு என்னவளை காதல் சொன்னவளை என்கிற கண்ணதாசன் பாடல் ஞாபகம் வருகிறதா?