Tuesday, March 31, 2015

இனிக்கும் தமிழ்-23



காளமேகம் பிற்காலப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ 3 அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்ரு பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

Thursday, March 26, 2015

இனிக்கும் தமிழ்-22



உவமை என்ற சொல் உவமானம் என்றும் வழங்கும்.ஆங்கிலத்தில் இதை simile என்பர்.

உவமையின் இலக்கணம் பற்றி கூறுகையில் அறிஞர்கள், 'தெரிவிக்க விரும்பும் பொருளைத் தெரிந்த பழைய பொருளோடு 'போல' போன்ற இணைப்புச் சொற்களால் ஒப்பிட்டு விளக்குவதே உவமை என்றுள்ளனர்.

ரசிக்கத்தக்க சில உவமைகளைப் பார்ப்போம்...

பாரதிதாசன் 'குடும்ப விளக்கில்' குழந்தையின் புருவத்தை இப்படிச் சொல்கிறார்..

"எறும்புகொள் தொடர்ச்சி போலும்
அரும்பிட்ட புருவம்'

எறும்புகளின் வரிசையை அரும்பிவிட்ட புருவத்திற்கு உவமைப்படுத்தியுள்ளார்.

புலவர் நா.காமராசன் முதுமை பற்றி கூறுகையில்.

"தண்ணீரில் இருக்கும் மீனைத்தேடி
தூண்டில் வந்தது போல்..
என்னைத் தேடி
முதுமை வந்தது"   என்கிறார்.

அதே போன்று அவர்...

'ரோஜாவையும், மல்லிகையையும்
ஒரே நேரத்தில்
கூந்தலில் வைத்துக் கொள்ளும்
பெண் சிறுமி போல
சூரியனையும் சந்திரனையும்
விடியலின் மெல்லிய வெளிச்சத்தில்
சூடிக் கொண்டிருக்கும் வானம்'     என்கிறார்.

ரோஜாவையும்,மல்லிகையையும், சிறுமியையும் முறையே சூரியன், சந்திரன்,வானத்திற்கு ஒப்பிடுகிறார்.

மு.மேத்தா...'சரியாடி பராசக்தி' என்னும் கவிதையில்..

"தண்ணீர்க் குடம்போல்
தனித்துக் காட்சி தரும்
சின்னஞ்சிறிய சிங்களத்தில் தமிழர்களின்
கண்ணீர்க் குடமன்றோ
கவிழ்க்கப்பட்டு விட்டது'   என்கிறார்

தண்ணீர்க்குடம் தனியாகக் கிடப்பது போல சிங்களம் தனியாக நாற்புறமும் நீரினில் அமைந்துள்ளது என்றும் தமிழர்கள் கண்ணீரில் வாடுகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

வைரமுத்து..ஏ.இரண்டாயிரமே என்ற தலைப்பில் எழுதியுள்ளார்...

காவிரி பாய்ந்து
அன்னம் விளையுமா?
இல்லை
காவிரி அன்னம் போல்
காணாமல் போகுமா?

இதில் அன்னம் என்ற சொல் நெல்லிற்கும்..பழங்காலத்தில் இருந்ததாகச் சொல்லப்படும் அன்னப் பறவையையும் குறிக்கிறது.அன்னப் பறவை காணாமல் போனதுபோல் காவிரி ஆறும் காணாமல் போகிவிடுமா? என்கிறார்.இக்கவிதை உவமையால் பொருளை வெளிக் கொணர்கிறது எனலாம்.

Tuesday, March 24, 2015

இனிக்கும் தமிழ்-21




நிலவை பெண்களுக்கு ஒப்பிட்டு எவ்வளவு கவிதைகள்...

வள்ளுவனும் அதற்கு விலக்கல்ல.

மங்கையின் முகத்திற்கும் நிலவிற்கும் வேறுபாடு தெரியாது விண்மீன்கள் தவிக்கின்றனவாம்

தேய்ந்தும், வளர்ந்தும் ஒளி பொழியும் நிலவில் உள்ள சிறு களங்கம் கூட இந்த மங்கை நல்லாள் முகத்தில் இல்லையாம்

முழு நிலவே..என் காதலுக்கு உரியவளாக நீயும் ஆக வேண்டுமாயின்..என் காதலியின் முகம் போல ஒளிதவழ நீடு வாழ்வாயாக

நிலவே! மலரனைய கண்களையுடைய என் காதல் மங்கையின் முகத்திற்கு ஒப்பாக நீயிருப்பதாய் நீ பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டுமானால் (அதில் நீ தோல்வியுறாமல் இருக்க) பலரும் கானும்படியாக நீ தோன்றாது இருப்பதே மேல்.

(இன்பத்துப்பால்..குறள்கள்..1116,1117,1118,1119)

இப்போதைய கவி ஒருவன்...தன் காதலி இளமையானவள் என்பதை இப்படிச் சொல்கிறான் நிலவை அழைத்து...

'என் அருமைக் காதலிக்கு..நீ இளையவளா..அல்ல மூத்தவளா.." என.

மற்றவனோ..நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்றும், நிலவே என்னிடம் நெருங்காதே என்கிறான்.

இன்னொருவன்..நிலவைப் பெண்ணாகவும்..அப்பெண் பார்க்கும் கண்ணாடியாக நீல வானத்தையும் கூறுகிறான்.

பிறை நிலவை பெண்ணின் நெற்றிக்கு ஒப்பிட்டு  கவிகள் 'பிறை நுதல்' என்கின்றனர்.

அனால் இந்த உவமைகள் எப்படியுள்ளன பாருங்கள்..

யானைத் தந்தம் போல
பிறை நிலா

வெட்டி எறிந்த நகம் போல
பிறை நிலா

அறுத்தெடுத்த பூசணிக்காய்
கீற்று போல
பிறை நிலா

இப்படி சொன்னதுடன் நிற்கவில்லை கவிதைகள்

ஒரு கவிஞர் சொல்கிறார்..

பிறை நிலவாய் இருந்தாலும் முழு நிலவின் உரு மங்கலாகத் தெரியும் அல்லவா? அந்நிலவை குழந்தையாகவும்..வானத்தை துணியாகவும்..குழந்தை வானத் துணியை ஈரம் பண்ணுகிறதாம்..

பெய்யும் ஒளி நீரால்
வானத் துணியில்
ஒரு வட்டமாய் ஈரம் பாயும்
                -என்கிறார்..

யார் என்ன சொன்னாலும்..எப்படி ஒப்பிட்டாலும்..தாய் மனமோ..

அந்நிலவை தன் உறவாய்..தம்பியாய் நினைக்கிறாள்..ஆகவே தான் தன் குழந்தைக்கு அந்த அம்புலிமாமாவைக் காட்டி அழைத்து சோறூட்டுகிறாள்.

Monday, March 16, 2015

இனிக்கும் தமிழ்- 20




இதயத்தில் காதலனைவரச்செய்வது கண்களே ஆகும்..ஆகவே தான் கவிகளும் இதயத்தின் வாயில் கண்கள் என்கிறார்கள்.

காதல் தோல்வியுற்ற பெண்..'என் கண்கள் செய்த பாவம் உன்னைக் கண்டது' என்கிறாள்.

காதல் தோன்ற முதல் கருவியாய் இருப்பது கண்களே.
.
அதையே வள்ளுவரும் ஒரு குறளில்..'கண்டபின் நீங்குமென் மென் தோள் பசப்பு' என்கிறார்.

அதாவது காதலனைக் கண்கள் காண முடியாததால் அவள் தோள்களில் பசலை நோய் படிகிறதாம்..கண்கள் அவனைக் கண்டுவிட்டால் அது மறைந்து விடுமாம்
.
ஆனால் அதே சமயம் பழி ஓரிடம்..பாவம் ஓரிடம் என்பார்கள்...
ஒருவன் ஏதேனும் தவறிழைத்து விட தண்டனையை வேறொரு அப்பாவி அனுபவிப்பான்..
அப்படிதான் கண்கள் செய்த பாவத்தை தோள்கள் அனுபவிக்கின்றன..இந்த முத்தொள்ளாயிரம் பாடலில்..

பாண்டிய மன்னன் நகர் வலம் வருகிறான்.அவனை ஒரு கன்னிப் பெண் காண்கிறாள்.உடன் அவன் மீது காதல் கொள்கிறாள்.அதன் காரணமாக பசலை படர்ந்தது அவள் உடல் முழுதும்.தன் உடலில் பசலைப் படரக் காரணம் தன் கண்களால் அவனைக் கண்டதால்தானே..ஆனால் ஒரு பாவமும் அறியா அவள் தோள்கள் அல்லவா தண்டனை பெற்றன.உண்மையில் தண்டனை பெற வேண்டியது கண்களல்லவா? இது எப்படியிருக்கிறது எனில் உழுத்தஞ் செடி வளர்ந்துள்ள வயலில் ஊரில் உள்ள கன்றுகள் நுழைந்து மேய்ந்து அழிக்க...ஆனால் அங்கிருந்த ஒன்றுமறியா கழுதையைப் பிடித்து காதை அறுத்து தண்டித்தது போல இருக்கிறதாம்.


உழுத உழுத்தஞ்செய் ஊர்க்கன்று மேயக்

கழுதை செவி அரிந்தாற்றால் - வழுதியைக்

கண்டநம் கண்கள் இருப்பப் பெரும் பணைத்தோள்

கொண்டன மன்னோ பசப்பு



  (முத்தொள்ளாயிரம் - பாண்டிய நாடு -60)
(இப்பாடலில் கண்களை..உர்க்கன்று ஆகவும்...பசலை படர்ந்த தோள்களை கழுதைக்கும் ஒப்பிட்டுள்ளார் கவிஞர்.)
முத்தொள்ளாயிரப் பாடல்கள் பெரும்பாலும் கைக்கிளைக் காதலேயாகும்.

Wednesday, March 11, 2015

இனிக்கும் தமிழ்-19

கணவன் பொருளீட்ட மனைவியைப் பிரிந்துச் செல்கிறான்..மனைவிக்கு கணவனின் பிரிவை தாங்க முடியவில்லை..தன் நிலை குறித்து கணவனுக்கு சேதி அனுப்ப வேண்டும்..அப்போதுதான் அவன் உடன் திரும்புவான்..என எண்ணுகிறாள்..

யாரைத் தூது அனுப்புவது...என்ற கேள்வி எழுகிறது?..யார் அந்தக் காரியத்தைத் திறம்படச் செய்வர் என அறியாது மனதில் குழப்பம்..

தன்னிடம் வேலை செய்யும் பெண்ணை அனுப்பலாமா..? வேண்டாம் அது நன்மை பயக்காது

தான் வளர்க்கும் கிளியைத் தூது அனுப்புவோமா? ஆனால்..அதுவும் தன் தூதுப் பணியை திறம்படச் செய்யாது..

தன் தோழியை அனுப்பலாம் என்றாலோ..அவள் சென்று திரும்ப நாளாகலாம்..உடன் செயல்பட முடியாது..

அவன் நினைவை நெஞ்சிலிருந்து அகற்றி..பசலை நோயிலிருந்து விடுபட்டு தெய்வ வழிபாட்டில் மனதை செலுத்தலாம் என்றாலும் அது தீதில் முடியலாம்..

சரி..இதற்கு என்ன தான் வழி...ஒரே வழி..

அவன் திரும்பும் வரை அவன் பெயரை எண்ணி..மகிழ்ந்துக் கொண்டிருக்க வேண்டும்..என எண்ணுகிறாள்..

இதைத்தான் காளமேகப் புலவரின் இப்பாடல் கூறுகிறது

தாதிதூ தோதீது தத்தைதூ தோதாது
தூதிதூ தொத்தித்த தூததே - தாதொத்த
துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது
தித்தித்த தோதித் திதி

(அடிமைப்பெண் மூலம் அனுப்பும் தூது நன்மை பயக்காது..கிளியோ தூதுப் பணியில் திறம்பட செயலாற்றாது.தோழியின் தூதோ நாளைக் கடத்தும்..ஆகவே பூந்தளிர் போன்ற தேமல்கள் என் மேல் படராது தெய்வத்தை வழிப்பட்டுத் தொடர்தலும் தீதாகும்..தித்திப்பாய் இனிக்கும் அவன் பெயரை ஒதிக் கொண்டிப்பதைத் தவிர வேறு வழியில்லை)

கண்ணதாசன் தான் தயாரித்த வானம்பாடி படத்திலும்..நாயகன்..நாயகிக்கான பாட்டுப் போட்டியில் இப்பாடலை வைத்திருப்பார்.

காளமேகம் பற்றி சொல்லிவிட்டு..வள்ளுவன் பற்றி சொல்லவில்லையெனில் எப்படி...

உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ
யாருழைச் சேறியென் நெஞ்சு

என்கிறார்...உள்ளத்திலேயே காதலர் குடியிருக்கையில்..நெஞ்சே வெளியே அவனை நினைத்து எவரிடம் தேடி அலைகிறாய்?

Tuesday, March 10, 2015

இனிக்கும் தமிழ் - 18



காதல்...இந்த மூன்று எழுத்துச் சொல்லிற்குத்தான் எவ்வளவு வலிமை..
இந்தச் சொல் கோழையையும் வீரனாக்கியுள்ளது..வீரனையும் கோழை ஆக்கியுள்ளது.
சாம்ராஜ்யத்தையும் உருவாக்கி இருக்கிறது..சாம்ராஜ்யத்தையும் அழித்திருக்கிறது.
காதல்வசப்பட்டவர்கள்..ஓருயிர் ஈருடல் எனச் சொல்லிக் கொள்வர்..அப்படியாயின் இருவரில் ஒருவர் உயிர்விட்டால் மற்ற உடல் உயிரின்றி எப்படியிருக்கும்?
காதலைனையோ..காதலியையோ பறிகொடுத்தபின் மற்றவரால் எப்படி இருக்க முடியும்?இதையே திருவள்ளுவர் சொல்கிறார்

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்
அளியின்மை ஆற்ற நினைந்து (1209)

நாம் ஒருவரே.வேறு வேறு அல்லர் எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாய் போய்க்கோண்டிருக்கிறது..எனக் காதலி சொல்வதாகச் சொல்கிறார்.

ஆனால் குறுந்தொகையிலோ, நெய்தல் திணையில் சிறைக்குடி ஆந்தையார் என்னும் புலவர்..தலைவன் பிரிந்ததும் என்னுயிரும் போய்விடுவது மேலானது எனத் தலைவி சொல்வதாகக் கூறுகிறார்.அதற்கு அவர் அன்றில் பறவையைக் கூறுகிறார்.அன்றில் பறவை ஒரு நீர்வாழ்ப் பறவை.ஆணும்,பெண்ணும் ஒன்றையொன்று விட்டுவிடாது இணைந்தே தண்ணீரில் வலம் வரும்.இரண்டுக்கும் இடையில் பூ ஒன்று இடைப்பட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அதை நீண்ட காலப் பிரிவாய் எண்ணுமாம்.ஆகா..என்னவொரு அழகான சிந்தனை..

பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன
நீருறை மகன்றில் புணர்ச்சி போலப்
பிரிவு அரிது ஆகிய தண்டாக் காமமொடு
உடன் உயிர் போகுதில்ல - கடன் அறிந்து
இருவேம் ஆகிய புன்மை நான் உயற்கே

குறுந்தொகை-57
சிறைக்குடி ஆந்தையார்
(காப்புமிகுதிக்கண் ஆற்றாளாகிய தலைமகள் தோழியிடம் கூறுவது)
நீர்வாழ்ப் பறவை அன்றில் , ஆணும்,பெண்ணுமாக ஒன்றை ஒன்று பிரியாமல் வாழ்வன.தமக்கிடையே பூ ஒன்று இடைபட்டு தடையை ஏற்படுத்தினாலும்..அந்தப் பிரிவை ஓர் ஆண்டு கால அளவிலான பிரிவாக எண்ணி வருந்தும் தன்மையன.அந்தப் பறவைகள் போல ஓருயிர் ஈருடலாக நானும், தலைவனும் வாழ்கிறோம்.தலைவன் பிரிந்த போது ஓருயிர் ஓர் உடலில் வாழும் இழிவு ஏற்படும்.அதற்குத் தலைவன் பிரிந்த உடன் என்னுயிரும் போய்விடுவது மேலானது என்கிறாள் தலைவி.

Monday, March 9, 2015

இனிக்கும் தமிழ்-17



நண்பர் ஒருவர் நம்மை 5 மணிக்கு சந்திப்பதாகச் சொல்கிறார்..ஒரு முக்கிய விஷயம் குறித்து பேச..ஆனால் 5-15 ஆகியும் அவர் வரவில்லை..பின் அவர் வருகிறார்.உடன் நாம் என்ன சொல்வோம்,,"ஏன் 15 மணித்துளி தாமதம்..ஒவ்வொரு மணித்துளியும் ஒரு யுகமாய் கழிந்தது' என்கிறோம்..

எதையோ எதிர்ப்பார்த்து காத்திருக்கையில்.. நேரம் போகாது..கடிகாரம் மெல்ல ஓடுவது போல இருக்கும்..

காதலன் காதலியை 6 மணிக்கு கடற்கரையில் சந்திப்பதாகக் கூறுகிறான்..காதலி வந்து வழக்கமான இடத்தில் அமர்கிறாள்.காதலன் வரக் காணோம். போவோர்,வருவோர் எல்லாம் அவளை ஒரு மாதிரி பார்த்துப் போகிறார்கள்...அவளுக்கு சங்கடமாய் இருக்கிறது..காதலன் 6-10க்கு வருகிறான்.."சாரி..டியர்..டிராஃபிக் அதிகம்..அதுதான்..'என்கிறான்..

காதலிக்கு கோபம் வருகிறது,,'உங்களுக்கென்ன ஏதோ ஒரு சாக்கு..ஆனால் இங்கு காத்திருக்கும் எனக்கல்லவா..தர்மசங்கடம்..போவோர் வருவோர் பார்வையிலிருந்து தப்ப முடியவில்லை..10 நிமிடங்கள் கடப்பது பத்து மணிநேரம் கடந்தாற் போல் இருக்கிறது' என அவனிடம் ஊடல் கொள்கிறாள்

இது இன்று..நேற்றல்ல..அன்றிலிருந்து எப்போதும் நடப்பதுதான்..என்பதை குறுந்தொகையில் இந்த பாடல் மூலம் புலப்படுகிறது.

தலைவன் மறுநாள் காலை வருவதாக முதல்நாள் செய்தி வருகிறது.பகல் நேரத்தைக் கூட அவள் கடந்து விட்டாள்..ஆனல் இரவைக் கடப்பது என்பது கடலைக் கடப்பதைவிட பெரிதாக இருக்கும் போலிருக்கிறதாம்..என் உயிர் போவதற்குள்..'கடந்து விட முடியுமா?' என்கிறாள்.



எல்லை கழிய முல்லை மலர

கதிர்சினந் தணிந்த கையறு மாலை

உயிர்வரம்பு ஆக நீந்தின மாயின்

எவன் கொல்? வாழி தோழி!

கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே!!



-கங்குல வெள்ளத்தார் - முல்லைத் திணை-387

பகலின் எல்லை முடிந்து..முல்லைப் பூக்கள் மலரத் தொடங்கிவிட்ட மாலை நேரம்.சூரியனின் சினம் தணிந்து வரும் இரவு நேரம்.இதை என் உயிர் போவதற்கு முன்னால் நீந்தி கடந்து விட முடியுமா? தோழி என்கிறாள்.இரவு வெள்ளம் கடலை விட பெரிதாக இருக்கிறதாம்..

அதாவது தலைவன் வரும் முன்னர் இரவை கடப்பது ..இரவு நீண்டுக் கொண்டேப் போகிறதாம்..அதற்குள் அவள் உயிர் போய்விடுமா? என்கிறாள்.

காத்திருப்பது சுகம் என்றாலும்..காத்திருக்கும் நேரம் நீண்டுக் கொண்டிருந்தால்..

அந்த துயரத்தின் வெளிபாட்டையே இந்த குறுந்தொகை பாடல் சொல்கிறது.

கங்குல் வெள்ளம்.என்பது .இரவு வெள்ளம்..

இப்பாடலை எழுதியவர் அதனால் கங்குல வெள்ளத்தார் எனப்பட்டார்.

Friday, March 6, 2015

இனிக்கும் தமிழ்-16




காதலன்..காதலி..ஒரு மாலை நேரம்....அருவி சலசலத்து ஓடும் மனத்திற்கு ரம்மியமான சூழலில் சந்திக்கிறார்கள்..காதலில் மூழ்கியிருக்கும் வேளையில் ..உணர்ச்சி வசப்பட்டு..உடலுறவு கொண்டு விடுகிறார்கள்.சாதாரணமாக காதலர்களுக்கு நிலவு சாட்சியாக அமைவதுண்டு.இங்கு அதுவும் இல்லை.

காதலன் பிரிந்து செல்கிறான்..ஆனால் அவளோ தவறு செய்து விட்டதாக நினைக்கிறாள்.நாளைக்கு ஏதேனும் விரும்பத்தகாதது நடந்தால் சாட்சி சொல்லக் கூட யாரும் இல்லை.இழப்பின் வெளிப்பாடை
குறிஞ்சி நிலப் பெண் பாடுவது போல அமைந்துள்ளது இப்பாடல்.

யாரும் இல்லைத் தானே கள்வன்
தானது பொய்ப்பின் யானெவன் செய்கோ
தினைத்தாள் அன்ன சிறுபசுங் கால
ஒழுகுநீர் ஆரல் பார்க்கும்
குருகும் உண்டுதான் மணந்த ஞான்றே
(கபிலர் - குறுந்தொகை 25)


தவறு நடந்து விட்டது..அப்போது யாரும் இல்லை அந்தத் திருடன் (காதலன்) மட்டும் தான் இருந்தான்.நாளை நான் இல்லை என அவன் பொய் உரைத்தால் நான் என்ன செய்வேன்.நாங்கள் கூடிய போது தினையின் தாளைப்போன்ற சிறிய கால்களுடன் ஆரல் மீனுக்காக ஓடும் நீரில் காத்திருந்த கொக்கு மட்டுமே இருந்தது என்கிறாள். கொக்கு மட்டுமே சாட்சியாம்.

இப்பாடல் குறுந்தொகையில் கபிலர் இயற்றிய பாடல்.

Wednesday, March 4, 2015

இனிக்கும் தமிழ் - 15



கவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.

அத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.

அவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..

அத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..

ஆயின் என்ன விந்தை? உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன? இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.

பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன
பக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..
உச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை
உயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..
(மலரும் மாலையும்)

அடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகோ ளவே
பண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்
பக்குவம் ஏதடியோ
(மலரும் மாலையும்)

Tuesday, March 3, 2015

இனிக்கும் தமிழ்-14

காளமேகப்புலவர்.நகைச்சுவை மன்னர்.

ஒரு நாள் வெயில் நேரம்.புலவருக்கோ தாகம்.அப்போது மோர் விற்று வருகிறாள் ஒரு பெண்.அவளிடம் மோர் வாங்கிகிறார்.அவளோ..காசு வேண்டாம்..என் மீது ஒரு கவி பாடுங்கள் என்கிறாள்.

உடன் கவி'அம்மையே..உன் மகத்துவத்தைக் காட்டிலும்..உன் மோரின் மகத்துவம் மிகப்பெரிது.அதைப்பாடுகிறேன்..என்கிறார்.

மோரே..நீ இம்மண்ணுலகப் பிறவியா..இல்லை..இல்லை..நீ தேவலோகப் பிறவி.திருமால் 10 அவதாரம் எடுத்தார்..நீ மூன்று அவதாரம் எடுத்தாய்.திருமாலுக்கு உவமை கூறும் வகையில் பெருமை மிக்க கருமை நிற வானில் சஞ்சரித்தாய்.உனக்கு கார் என பெயர் சூட்டி மண்ணுலகிற்கு அழைத்தோம்.திருமால் மண்ணுலகில் தேவகி வயிற்றில் அவதரித்தது போல் நீயும் மண்ணுலகில் நீராய் பொழிந்தாய்.
கண்ணன் தேவகியின் வயிற்றில் பிறந்தாலும்..யசோதை என்ற இடையர் குல பெண்ணிடம் புகுந்தான்.நீயும் நீராய் பொழிந்து பிறந்த இடத்தில் நில்லாமல்..இந்த ஆச்சியின் குடத்தில் புகுந்தாய்.உடனே இவளும் உனக்கு மூன்றாவது பெயர் 'மோர்" என சூட்டி விட்டாள்.உன் திருநாமத்தை 'மோரோ..மோர்..'என பன்முறை ஓதி பாராட்டுகிறாள்.

வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகிப் பிறவுமாகி நிற்கும் இறைவனை எப்படிப் பாராட்டுவேன் என்கிறார் மணிவாசகர்.காராகி,நீராகி,மோராகி நிற்கும் உன்னை எப்பேரால் வாழ்த்துவேன் என்கிறார் காளமேகம்.அம்மையே..பிடியுங்கள் உங்கள் மோர் மீது என் ஆசுகவி என்கிறார்.

கார் என்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது
நீர் என்று பேர்படைத்தாய் நீணிலத்தில் வந்ததற்பின்
வார் ஒன்று பூங்குழலார் ஆய்ச்சியர்கை வந்ததற்பின்
மோர் என்று பேர் படைத்தாய் முப்பேரும் பெற்றாயே

Sunday, March 1, 2015

இனிக்கும் தமிழ்-13



சாதாரணமாக புலவர்கள் பொன் வேண்டி அரசனைப் புகழ்ந்து பாடுவர்.

அப்படி, நமது 23ஆம் புலிகேசி போன்ற ஒரு அரசன் மீது புலவர் ஒருவர் பொய்யாகப் புகழ் பாட..அரசனோ கோபமுற்றானாம்.

புலவர் பாடிய பாடல்-

சீருலா விய காமதேனுவே! தாருவே

சிந்தா மணிக்கு நிகரே

செப்புவசனத்து அரிச் சந்திரனே!

பாடலைக் கேட்ட மன்னன் கோபமடைந்து சொல்லியவை -

ஆரை நீ மாடுகல் மரம் என்றுரைத்தனை?

அலால் அரிச்சந்திரன் என்றே

அடாதசொற் கூறினை? யார்க்கடிமை யாயினேன்

யார் கையில் பெண்டு விற்றேன்?

தீருமோ இந்த வசை?

பிறகு..புலவர் ஏன் அங்கு நிற்கிறார்.பிடித்தார் ஓட்டம்.