Tuesday, October 28, 2014

இனிக்கும் தமிழ் - 3



காளமேகப் புலவர் 15ஆம் நூற்றாண்டில் வாழ்ந்தவர்.இவர் பாடிய சிலேடைப் பாடல்களும்..நகைச்சுவைப் பாடல்களும் பல..'ஆசுகவி' எனப் போற்றப்பட்டவர்.தங்குத் தடையின்றி கொடுத்த பொருள்..ஈற்றடி என எல்லாவிதத்திலும் தனது புலமைத் திறத்தை வெளிப்படுத்தியவர்..


'க' என்ற எழுத்து மட்டுமே கொண்ட பாடலைப் பாடுமாறு ஒரு முறை காளமேகத்திடம் சொல்லப் பட்டது..உடன் அவர் பாடிய பாடல்..

காக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை
கோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்
காக்கைக்குக் கைக்கைக்கா கா

இதற்கான அர்த்தம்..காக்கையானது பகலில் கூகை (ஆந்தை)யை வெல்ல முடியும்..கூகையானது இரவில் காக்கையை வெல்ல முடியும்..கோ (அரசன்) பகைவரிடமிருந்து தன் நாட்டை இரவில் ஆந்தையைப் போலவும்..பகலில் காக்கையைப் போலவும் காக்க வேண்டும்..எதிரியின் பலத்தை அறிந்து..கொக்குக் காத்திருப்பதுப் போல தக்க நேரம் வரும்வரை காத்திருந்துத் தாக்க வேண்டும்..தகுதியற்ற காலத்தில் முயன்றால் அரசனுக்குக் கூட (கைக்கைக்காகா) கையாலாகாததாகிவிடும்.

காளமேகனைப் புகழ்கிறாயே..நான் ஒன்றே முக்கால் அடியில் இதைச் சொல்லியுள்ளேனே! என்கிறான் வள்ளுவன்

.
பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்
வேந்தர்க்கு வேண்டும் பொழுது

பகல் நேரமாக இருந்தால் கோட்டானைக் காக்கை வென்றுவிடும்..எனவே எதிரியை வீழ்த்துவதற்கு ஏற்ற காலத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்..

Saturday, October 25, 2014

இனிக்கும் தமிழ் - 2



கவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.

அத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.

அவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..

அத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..

ஆயின் என்ன விந்தை? உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன? இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.

பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன
பக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..
உச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை
உயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..
(மலரும் மாலையும்)

அடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகோ ளவே
பண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்
பக்குவம் ஏதடியோ

இனிக்கும் தமிழ் - 1



எனது எண்ணங்கள்-

"தமிழ்"
தங்கச்சுரங்கம் அது
அதனுள்...
எத்தனை...எத்தனை..அழகான..அறிவுத் தாகம் தீர இலக்கியங்கள்..கவிதைகள்..என நம் முன்னோர் தமிழ் வாழ எழுதிச் சென்றுள்ளனர்!

அத்தனையும் ஒரு கமண்டலத்துள் அடக்க அகத்தியனா நாம்?
ஆனாலும், அக்கடலில் மூழ்கி..நம்மால் எடுக்க முடிந்த முத்துகளை பகிர்ந்து கொள்ள ஆசை.
அதுவே இவ் வலைப்பூ துவங்கக் காரணம்.
இனி..வாராவாரம் வாருங்கள்..தமிழைச் சுவையுங்கள்.

முதலில்....

"தமிழ்"..இதையேப் பாருங்கள்..
வல்லினத்தில் ஓர் எழுத்து  - த
மெல்லினத்தில் ஓர் எழுத்து-மி (ம)
இடையினத்தில் ஓர் எழுத்து-ழ் (ழ)

எப்படி நம் தமிழ்
அடுத்து..பாருங்கள்...
இறைவனுக்கு தமிழில் இருப்பதைப் போன்று சொல் வேறு எம்மொழியிலும் இல்லை எனலாம்.

"கடவுள்"

கட...எல்லாவற்றையும் கடந்தவர்
உள்-எல்லாவற்றினுள்ளும் இருப்பவர்..

இப்படி அவ்வப்போது சிறு செய்திகளுடன்..தமிழ்ச் சுவை படைக்க உள்ளோம்.  


முதலாவதாக :தமிழ்: பற்றி..பாரதிதாசனின் ஓர் கவிதை



தமிழுக்கும் அமுதென்று பேர்
ஆசிரியர் : கவிஞர் பாரதிதாசன்.


தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்
தமிழ் இன்பத் தமிழ்எங்கள் உயிருக்கு நேர்
தமிழுக்கு நிலவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் சமுகத்தின் விளைவுக்கு நீர்
தமிழுக்கு மணமென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் வாழ்வுக்கு நிருமித்த ஊர்
தமிழுக்கு மதுவென்று பேர்! - இன்பத்
தமிழ் எங்கள் உரிமைச்செம் பயிருக்கு வேர்!
(தமிழுக்கும் அமுதென்று)

தமிழ் எங்கள் இளமைக்குப் பால் - இன்பத்
தமிழ் நல்ல புகழ்மிக்க புலவர்க்கு வேல்
தமிழ் எங்கள் உயர்வுக்கு வான்! - இன்பத்
தமிழ் எங்கள் அசதிக்குச் சுடர்தந்த தேன்
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
(தமிழுக்கும் அமுதென்று)