Tuesday, July 28, 2015

இனிக்கும் தமிழ் - 46 காளமேகம் சிலேடைப் பாடல்கள் - 16



கீரைப் பாத்தியும், குதிரையும்

கட்டி யடிக்கையாங் கான்மாறிப் பாய்கையால்
வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்
மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்
ஏறப் பரியா குமே.


 கீரை விதை தெளிக்கும்போது பாத்தியிலுள்ள மண்ணாலகட்டிகள் அடித்து உடைக்கப்படும். வாய்க்காலில் மடை மாறித் தண்ணீர் பாயும். பாயும் மடையின் கரை வெட்டி மறிக்கப்படும். மேன்மை அதற்கு உண்டு. பாத்தியின் எல்லையில் நீர் முட்டியபின் மடை திருப்பிவிடப்படும்.

குதிரையானது வண்டியில் கட்டி அடிக்கப்படும். முன்னங்கால் பின்னங்கால் என்று கால் மாறிப் பாயும். காலைத் தரையில் வெட்டிக் காட்டித் தன் மேன்மையைக் குதிரை விளக்கும். தடை வரும்போது திரும்பி ஓடும்.

Tuesday, July 14, 2015

இனிக்கும் தமிழ் -45 காளமேகம் சிலேடைப் பாடல்கள் 13



கண்ணாடியும், அரசனும்

யாவருக்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள் ளாக்கியேற் றரசத்தால்
சதிருறலா லாடிய ரசாம்


கண்ணாடி – எவருக்கும் வஞ்சனை செய்யாது. எல்லாரையும் அவரவராய் அவரவரது பாவனையைக் காட்டும். தன் முகத்தில் உள்ள தீங்கைப் பார்த்து அகற்றிக்கொள்ள எல்லாரும் கண்ணாடி பார்ப்பர். எதிரில் உள்ளவரைத் தன் உள்ளுக்குள் காட்டும். பின்புறம் ‘ரசம்’ பூசப்பட்டிருக்கும். சதுரமாகவும் இருக்கும்


அரசன் - ஓரவஞ்சனை செய்யாமல் எல்லாரையும் தன்னை ஒத்தவராய்ப் பாவித்து அவரது தீது அகலும்படி பார்த்துக்கொள்வான். எதிரியைத் தன் ஆட்சிக்குள் அடக்கி ஏற்றுக்கொண்டு சுவைப்பான். நால்வகையான சதுரப்படைகளை உடையவன்.