Monday, April 27, 2015

இனிக்கும் தமிழ் -28



மேன்மக்கள் விரும்பாத சொற்களைக் கூறமாட்டார்கள்.எந்த ஒரு துயரம் வந்தாலும் தன் நிலை மாறாதிருப்பர்.புறங்கூற மாட்டார்கள்.இதைத்தான், "கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே. சங்கு சுட்டாலும் வெண்மை தரும்" என்பார் மூதுரையில் ஔவையார்.

பாலை எவ்வளவு காய்ச்சினாலும் அது தன் சுவையில் குன்றாது.அதுபோல எவ்வளவு துன்பங்களில் இருந்தாலும் நற்பண்புகள் உள்ளவர்கள் சிறந்தவர்களாகவே இருப்பர்.அது எப்படிப்பட்டது என்றால் வெண்மை நிறத்தில் உள்ள சங்கு தீயில் எவ்வளவு சுட்டாலும் வெண்மையாகவே இருக்கும் அதுபோல., என்கிறார்.


என்னவொரு அழகான உவமை

அட்டாலும் பால் சுவையில் குன்றாது அளவளாய்
நட்டாலும் நண்பு அல்லார் நண்பு அல்லர்
கெட்டாலும் மேன் மக்கள் மேன் மக்களே சங்கு
சுட்டாலும் வெண்மை தரும்

( நற்பண்பு இல்லாதோரிடம் நன்கு பழகினாலும் அவர்கள்
நண்பர்களாக மாட்டார்கள்.  நம் நிலை தாழ்ந்தாலும்
நற்பண்புள்ளோர் சிறந்தவர்களாகவே பழகுவர். அவர்கள் நட்பு
எவ்வளவு காய்ச்சினாலும் சுவை குன்றாத பாலைப் போன்றது.
தீயிலிட்டு சுட்டாலும் மேலும் மேலும் வெளுக்கும் சங்கினைப்
போன்றது அவர் நட்பு.)

இதையே வள்ளுவர் எப்படி சொல்கிறார்..தெரியுமா?

சாதரணமாக ஒரு பயிரைக் கண்டதுமே அந்து எப்பேர்ப்பட்ட நிலத்தில் விளைந்தது என்பதை ஒரு விவசாயி கூறிவிடுவான்.அதுபோல ஒருவர் பேசுவதை வைத்தே அவர்கள் எப்படிப்பட்டவர் என்பதை உணர்ந்திட முடியும் என்கிறார்.

இதை வைத்துதான், ஒருவன் செயல் வீரனா அல்லது வாய்ச்சொல் வீரனா என்பதையும் சொல்லி விடலாம்.



நிலத்திற் கிடந்தமை கால்காட்டும் காட்டும்
குலத்திற் பிறந்தார்வாய்ச் சொல்



(விளைந்த பயிரைப் பார்த்தாலே அது எந்த நிலத்தில் விளைந்தது என்பதி கண்டுபிடித்து விடலாம்.அதுபோல ஒருவரின் வாய்ச்சொல்லை வைத்தே அவர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தவர் என்பதி உணரலாம்)

Tuesday, April 14, 2015

இனிக்கும் தமிழ்-27



சாதாரணமாக நம் வீட்டுப் பெரியவர்கள் காகம் கரைந்தால்...இன்று யாரோ விருந்தினர் வருவார்கள்..என்று சொல்வதைக் கேட்கிறோம்.

இந்த நம்பிக்கை அப்போதே...சங்க காலங்களிலேயே இருந்திருக்கிறது.

குறுந்தொகையில் கீழே கொடுக்கப்பட்டுள்ள முல்லை திணை பாடலில் அதைச் சொல்கிறார் பாடலாசிரியர் நச்செள்ளையார்.

தலைவன், தலைவியைப் பிரிந்து சென்றுள்ளான்.தலைவி அவனது வரவை எதிர்பார்த்திருக்கிறாள்.அப்போது காகம் கரையும் போதெல்லாம்..."பார்த்தாயா..இன்று உன் தலைவன் வந்துவிடுவான் என்று கூறி தலைவியைத் தோழி சமாதானப் படுத்துகிறாள்.

தலைவன் திரும்ப வந்து, தான் வராத நேரத்தில், தலைவியை ஆறுதல் கூறித் தேற்றியதற்காக தோழியைப் பாராட்டுகிறான்.தோழியோ, நான் பெரியதாக ஏதும் செய்யவில்லை.அச்செயலைச் செய்தது காகம் தான்.அது கரையும் போதெல்லாம் "நீர் வருவீர்" என்று மட்டுமே ஆறுதல் கூறினேன் என்கிறாள்.

இனி பாடல்-

தோழி கூற்று
(தலைவியைப் பிரிந்து சென்ற மீண்டுவந்த தலைவன், “யான்பிரிந்த காலத்தில் தலைவி துயருறாமல் நன்கு ஆற்றுவித்திருந்தாய்”என்று தோழியைப் புகழ, “என் செயல் ஒன்றுமின்று; காக்கை கரைந்த நன்னிமித்தத்தால் அவளை ஆற்றுவித்தேன்” என்று அவள் கூறியது.)


 
திண்டேர் நள்ளி கானத் தண்டர்
 
பல்லா பயந்த நெய்யிற் றொண்டி
 
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோ
 
றெழுகலத் தேந்தினுஞ் சிறிதென் றோழி

பெருந்தோ ணெகிழ்த்த செல்லற்கு
 
விருந்துவரக் கரைந்த காக்கையது பலியே.


                                -காக்கை பாடினியார் , நச்செள்ளையார்.


 திண்ணிய தேரையுடையநள்ளி யென்னும் உபகாரியினது,  காட்டிலுள்ள, இடையர்களுக்குரிய, பல பசுக்கள் உண்டாக்கிய நெய்யோடு,  தொண்டியென்னும் ஊரிலுள்ள வயல்களில், முற்றும் ஒருங்கே விளைந்த, வெண்ணெல்லரிசியால் ஆக்கிய வெம்மையையுடையசோற்றை,  ஏழு பாத்திரங்களில்ஏந்திக் கொடுத்தாலும்,  என் தோழியாகிய தலைவியினுடைய, பெரிய தோளை நெகிழச் செய்த துன்பத்தை நீக்கும்பொருட்டு,  விருந்தினர் வரும்படி,  கரைதலைச் செய்த காக்கைக்கு இட்ட உணவே, சிறந்தது ஆகும்
 

    (கருத்து) காக்கை கரைதலால் நீர் வருவீர் என தலைவியை ஆற்றுவித்தேன்.

Tuesday, April 7, 2015

இனிக்கும் தமிழ் -26



பணம் வாழ்வில் முக்கியமில்லை குணம் தான் முக்கியம் என்றெல்லாம் நாம் சொன்னாலும்..நம்மிடம் செல்வம் இல்லையெனில் மற்றவர்களால் சற்று இகழ்ச்சியுடனேயே பார்க்கப் படுகிறோம் என்பதே நடைமுறை உண்மை.

செல்வத்தின் சிறப்பை நன்கு உணர்ந்தவர் திருவள்ளுவர்..அருளும் பொருளும் மனிதனின் இன்றியமையாதத் தேவைகள்.ஆயின்..இவை இரண்டிடிலும் பொருளின் அவசியத்தை மறக்கமுடியாது...மறுக்கவும் முடியாது..பொருளில்லாமல் இவ்வுலகில் இன்பமாக வாழ முடியாது என்பது உண்மை..ஆனால் வள்ளுவனோ..மேலும் ஒரு படி அதிகம் சென்று..

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு - என்கிறார்

பொருளின் பெருமை இது..அருள் என்பது அன்பின் வழித்தோன்றலாகும்..தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்று அன்பு எனப்படும்..தொடர்பில்லாதவரிடம் கொள்ளும் பற்று அருள் ஆகும்.இவை இரண்டும் உலக மாந்தர்க்கு வேண்டிய பண்புகள்..ஆனால் அன்பும்..அருளும் உடையவரிடத்து பொருள் இல்லையேல் என்ன பயன்?

அதே போல் பொருளுடையவரிடம், அன்பும்..அருளும் இருப்பின் அது சுற்றத்தாருக்கும்...பிறருக்கும் பயன்படும்..

பொருளின் சிறப்பை மற்றுமொரு இடத்தில் சொல்கிறார்....

அன்பு என்பது ஒரு நல்ல தாயைப் போல..அந்தத் தாயின் குழந்தையே அருள் ..அந்த அருள் குழந்தையை வளர்க்க ஒரு செவிலித்தாய் வேண்டும்..அவள் வறுமை மிக்கவளாய் இருந்தால்..குழந்தை எப்படி நன்கு வளரும்..ஆகவே அப்படிப்பட்ட செவிலித்தாய் செல்வம் மிக்கவளாய் இருக்க வேண்டும்..

அன்பு என்னும் தாய்ப் பெற்ற அருள் என்னும் குழந்தை வளர பொருள் என்னும் செவிலித்தாய் வேண்டும்.. அப்போதுதான் அது ஓங்கி வளர்ந்து புகழ்ப் பெற்று வாழும்..இந்த உலக வாழ்க்கையின் உண்மையையே

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

என்கிறார் வள்ளுவர்.

Thursday, April 2, 2015

இனிக்கும் தமிழ்-25



கவிஞர்கள், கலைஞர்கள் இயற்கையைக் கடவுளாகக் கண்டனர்.அன்பின் முதிர்வாம் காதல் கண்டனர்..மாந்தர் வாழ்வில் உள்ள தீமைகள் இன்றிப் புள்ளினங்கள் நடத்தும் நலவாழ்வு கண்டனர்.

அத்துடன் நில்லாது,இத்தகையக் காட்சிகளை செந்தமிழ் நடையில்..பாட்டோவியமாகத் தீட்டிக் காட்டுகின்றார் கவமணி தேசிக விநாயகம் பிள்ளை.

அவருக்கு பசுவின் செயல்கள் பெரு வியப்பை ஏற்படுத்துகின்றனவாம்.சுவையற்ற புல்லைத் தின்கிறது பசு.அதனைச் சுவை மிக்க வெண்ணிற பாலாக்கி தருவதற்கு..அது என்ன செய்கிறது..

அத்துடன் மட்டுமின்றி..கன்று ஈனும் பசு..ஈன்றதும்..அக்கன்று மூச்சு ..பேச்சின்றிச் சோர்ந்து கிடக்கிறது.தனது அன்புக் கன்றை உச்சி மோந்து நாவால் நக்குகிறது தாய்ப்பசு.அவ்வளவுதான்..

ஆயின் என்ன விந்தை? உடனே உயிர் பெற்று எழுந்து துள்ளுகின்றது கன்று..தாய்ப்பசுவின் நாவில் உள்ள உயிரெழுப்பும் மாயம் என்ன? இதையெல்லாம் பசுவைப் பார்த்து கேட்பது போல கேட்கிறார்.

பச்சைப் புல்லைத் தின்று வெள்ளைப் பால்தரநீ என்ன
பக்குவஞ்செய் வாயதனைப் பகருவையோ பசுவே..
உச்சியுடன் நக்கி யீன்ற உடன் உனது கன்றை
உயிர் எழுப்பும் மாயம் ஏதோ உரைத்திடுவாய் பசுவே..
(மலரும் மாலையும்)

அடுத்து கிளியிடம் வருகிறார்.அக்கிளியின் மொழியில் எவ்வளவு இனிமை.அவ் இனிமை உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றதாம்.அது தனது மொழியுடன் எவ்வாறு பண்ணின் இனிமையைக் கலந்து பக்குவம் செய்தது.யாரும் அதற்கு இனிமையை பயிற்றவும் இல்லை.நாள் தோறும் உண்ணும் கனிகளின் இனிமையைத் தன் மொழியில் கலந்து குழைத்துக் கூட்டி அம்மொழியை பன்மொழி ஆக்கிகின்றதே..உண்ணும் கனியின் நாச்சுவையைக் கேட்கும் மொழியின் பாச்சுவையாக்கி அளித்து உள்ளத்தைக் கொள்ளை கொள்கிறது.இதற்கு கிளி செய்யும் பக்குவம் என்ன..அதையேக் கேட்கிறார் கவிமணி..

உண்ணும் கனியிலெழும் - சுவையினை
உள்ளம் களிகோ ளவே
பண்ணிற் கலந்திட நீ - தெரிந்து செய்
பக்குவம் ஏதடியோ
(மலரும் மாலையும்

Wednesday, April 1, 2015

இனிக்கும் தமிழ் -24



கவி காளமேகம் சிலேடையாக கவி பாடுவதில் வல்லவர்.பல சமயங்களில் அவை வசை பாடும் கவிகளாக அவை அமைவதால் 'வசைப்பாட காளமேகம்' என்னும் பெயர் பெற்றார்.இவர் பாடல்களில் எள்ளல்,ஏசல்,கிண்டல் என எல்லாம் இருக்கும்.

சிவபெருமானை முக்கண்ணன் என்பர்.நெற்றிக்கண்ணையும் சேர்த்து ..ஆனால் காளமேகம் சொல்கிறார்..சிவனுக்கு இருப்பது அரைக் கண்ணாம்.

முக்கண்ண னென்றானை முன்னோர் மொழிந்திடுவார்
அக்கண்ணிற் குள்ள தரைக் கண்ணே

என்கிறார்.

அதாவது..சிவனுக்கு இருக்கும் முக்கண்ணில் ..தன் உடலில் பாதியை உமைக்கு கொடுத்துவிட்டபடியால்..மீதிப் பாதியில் இருப்பது ஒன்றரைக் கண்ணே..அதிலும் ஒரு கண் கண்ணப்ப நாயனார் கொடுத்தது.மீதம் இருக்கும் அரைக் கண்ணே சிவனுடையது என்கிறார்.