Tuesday, June 23, 2015

இனிக்கும் தமிழ் - 44 காளமேகம் சிலேடைப் பாடல்கள் 15




குதிரையும், காவிரியாறும்

ஓடுஞ் சுழிசுத்த முண்டாகுந் துன்னலரைச்
சாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் – நாடறியத்
தேடுபுகழான் திருமலைரா யன்வ ரையில்
ஆடுபரி காவிரி யாமே.

குதிரை – ஓடும். நல்ல குதிரைக்கு அடையாளமான ‘சுழி’ சுத்தம் உண்டாகியிருக்கும். பகைவரை விரட்டியடிக்கும். தன்னை வளர்ப்பவனிடம் அன்பால் தலை சாய்க்கும்.

காவிரி ஆறு -நீராய் ஓடும். நீர்ச்சுழி இருக்கும். நீர் சுத்தம் ஆகும். (தன்னை அடையும் மலரை அடித்துக்கொண்டு ஓடும். மக்கள் குளிப்பதற்காக விருப்பமுடன் அதன்மீது தலைசாய்ப்பர்.

Wednesday, June 17, 2015

இனிக்கும் தமிழ் - 43 காளமேகம் சிலேடைப் பாடல் - 14




கண்ணாடியும்,  அரசனும்

யாவருக்கும் ரஞ்சனைசெய் தியாவருக்கு மவ்வவராய்ப்
பாவனையாய்த் தீதகலப் பார்த்தலால் – மேவும்
எதிரியைத் தன்னுள் ளாக்கியேற் றரசத்தால்
சதிருறலா லாடிய ரசாம்


கண்ணாடி – எவருக்கும் வஞ்சனை செய்யாது. எல்லாரையும் அவரவராய் அவரவரது பாவனையைக் காட்டும். தன் முகத்தில் உள்ள தீங்கைப் பார்த்து அகற்றிக்கொள்ள எல்லாரும் கண்ணாடி பார்ப்பர். எதிரில் உள்ளவரைத் தன் உள்ளுக்குள் காட்டும். பின்புறம் ‘ரசம்’ பூசப்பட்டிருக்கும். சதுரமாகவும் இருக்கும்.

அரசன் - ஓரவஞ்சனை செய்யாமல் எல்லாரையும் தன்னை ஒத்தவராய்ப் பாவித்து அவரது தீது அகலும்படி பார்த்துக்கொள்வான். எதிரியைத் தன் ஆட்சிக்குள் அடக்கி ஏற்றுக்கொண்டு சுவைப்பான். நால்வகையான சதுரப்படைகளை உடையவன்.

Monday, June 15, 2015

இனிக்கும் தமிழ் -42 காளமேகம் சிலேடைப் பாடல்கள்.- 12



வெற்றிலையும்...விலைமகளும்

கொள்ளுகையா னரிற் குளிக்கையான் மேலேறிக்
கிள்ளுகையாற் கட்டிக் கிடக்கையால் – தெள்ளுபுகழ்ச்
செற்றலரை வென்ற திருமலைரா யன்வரையில்
வெற்றிலையும் வேசையாமே.

வெற்றிலை – விற்போர் கையால் கொள்ளும் நீரால் குளிப்பாட்டப்படும். கொடிக்காலில் மேலே ஏறி வெற்றிலையைக் கிள்ளுவர். கவுளி கவுளியாக அடுக்கிக் கட்டி வைக்கப்படும்.

 விலைமகள் – வேசை கையால் தழுவிக்கொள்ளப்படுவாள். குளித்துவிட்டு உலாத்துவாள். அவன் மேல் ஏறிக்கொண்டு அவள் அழகு மேனியை ஆசையாகக் கிள்ளுவர்.

Sunday, June 14, 2015

இனிக்கும் தமிழ் - 41 காளமேகம் சிலேடைப் பாடல்கள்-11




பனைமரமும், விலைமகளும்


கட்டித் தழுவுதலாற் கால்சேர வேறுதலால்
எட்டின்பன் னாடை யிழுத்தலால் - முட்டப்போய்
ஆசைவாய்க் கள்ளை அருந்துதலா லப்பனையும்
வேசையென லாமேவி ரைந்து. 

பனைமரம் – பனைமரத்தில் ஏறுவோர் அதனைக் கட்டித் தழுவிக்கொண்டும் காலைச் சேர்த்து வைத்துக்கொண்டும் ஏறுவர். எட்டி அதன் பன்னாடையை இழுத்து எறிவர். முட்டிக்கொண்டு தன் ஆசை வாயால் அதன் கள்ளை அருந்துவர்.

விலைமகள் - விலைமகளை  (அவளிடம் வருவோர்) கட்டித் தழுவுவர். காலைச் சேர்த்து வைத்துக்கொண்டு அவள்மீது ஏறுவர். எட்டிப் பிடித்து அவளது பன்னாடையை (மடித்துக் கட்டிய ஆடையை) இழுத்து அவிழ்ப்பர். முட்டிக்கொண்டு அவளது ஆசைகாட்டும் வாயிலுள்ள எச்சில் கள்ளை அருந்துவர்.

Monday, June 8, 2015

இனிக்கும் தமிழ் - 40 காளமேகம் சிலேடைப் பாடல்-10




மீனும் பேனும்

மன்னீரிலே பிறக்கும மற்றலையி லேமேயும்
பின்னீச்சிற் குத்தும் பெருமையால் - சொன்னேன்கேள்
தேனுந்து சோலைத் திருமலைரா யன்வரையில்
மீனும்பே னுஞ்சரி யாமே.


மீனானது நிலைபெற்ற நீரிலே பிறக்கும். மற்று அதன் நீரலையிலே மேயும். திரும்பும் பின்-நீச்சலில் குத்தும்.

பேனானது நிலைத்திருக்கும் ஈரிலே பிறக்கும். மன்னித் தலையிலே மேயும். பின்னி எடுத்து ஈச்சு என்னும் ஈர்கொல்லியில் குத்தப்படும். இவை இரண்டிற்கும் பெருமை.

Friday, June 5, 2015

இனிக்கும் தமிழ் -39 காளமேகம் சிலேடைப் பாடல்கள்- 9



நாயும் தேங்காயும்

ஓடுமிருக்கும் அதனுள்வாய் வெளுத்தி ருக்கும்
நாடுங் குலைதனக்கு நாணாது – சேடியே
தீங்கான தில்லாத் திருமலைரா யன்வரையில்
தேங்காயும் நாயுமெனச் செப்பு .


நாயானது ஓடும். இருக்கும்.. அதன் உள்வாய் வெள்ளையாக இருக்கும். நம்மை நாடி வரும். வாலைக் குழைத்து வருவதற்கு வெட்கப்படாது.

தேங்காயில் ஓடும் இருக்கும். தேங்காயின் உள்பகுதி வெள்ளையாக இருக்கும். தென்னை மரத்தில் நாம் விரும்பும் தென்னங்குலை தள்ளும். தென்னைமரமாக இருக்கும்போது வளைந்து கொடுக்காது.

Thursday, June 4, 2015

இனிக்கும் தமிழ்- 38 காளமேகம் சிலேடைப் பாடல்கள் - 8



சந்திரனும் மலையும்

நிலவாய் விளங்குதலால் நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலாற் சென்று – தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதிக்கு நிகராக வழுத்து


சந்திரன் நிலாவாக விளங்குகிறது. நீண்ட வானத்தில் படிந்து சில நேரங்களில் உலாவுகிறது. தலைக்கு மேல் தோன்றி வருகிறது.

மலையானது நிலத்தின் வாய் போலப் பிளவு அடுக்ககுகளோடு காடப்படுகிறது. நீண்ட வானத்தில் படிந்திருப்பது போலத் தோன்றுகிறது. சில வேளைகளில் நாம் மலைமேல் உலாவி வருகிறோம். நம் மேல் உயரமாகத் தோன்றுகிறது.

Wednesday, June 3, 2015

இனிக்கும் தமிழ் -37 காளமேகம் சிலேடைப் பாடல்கள்-7



முகுந்தனும் முறமும்

வல்லரியாய் உற்றிடலான் மாதர்கையில் பற்றிடலான்
சொல்லரிய மாப்புடைக்கத் தோன்றுதலால் – வல்லோர்
அகந்தனிலே வாழ்தலா லன்றுல களந்த
முகுந்தனுமே யகும் முறம்..


உலகளந்த பெருமாளாகிய முகுந்தன் வலிமை மிக்க சிங்கமாகத் தோன்றினான். குழந்தை கண்ணனாக மாதர் கையில் பிடிபட்டான். சொல்வதற்கு அரிய பெருமை மிக்க மா என்னும் திருமகள் தன் நெஞ்சில் புடைத்திருக்கத் தோன்றுகிறான். நெஞ்சுரம் மிக்கவர் செஞ்சகத்தில் வாழ்கிறான்.

முறம் வலிமை மிக்க மூங்கில் என்னும் அரியால் பின்னப்பட்டது. மகளிர் புடைப்பதற்காகக் கையில் பற்றுகின்றனர். சொல் என்னும் நெல்லு மாவைப் புடைப்பதற்காகத் தோன்றி வந்துள்ளது. வலிமை மிக்கார் வீடுகளில் வாழ்கிறது.

இனிக்கும் தமிழ்-36 காளமேகம் சிலேடைப் பாடல்கள்- 6


பாம்பும் எலுமிச்சம்பழமும்

பெரியவிட மேசேரும் பித்தர் முடியேறும்
அரியுண்ணும் உப்பு மேலாடும் – எரிகுணமாம்
தம்பொழியுஞ் சோலைத் திருமலைரா யன்பரையில்
பாம்பும் எலுமிச்சம் பழம்


பாம்பு பெரிய அளவில் விடம் (நஞ்சு) சேர்ந்திருக்கும். பித்தராகிய சிவபெருமான் முடிமேல் ஏறியிருக்கும். அரி (காற்று) உண்ணும். அதனால் (தலையானது) உப்பி மேலே படமெடுத்து ஆடும். எரிச்சல் (சினம்) குணம் உடையது

எலுமிச்சம்பழம் பெரியவர்களிடம் செல்லும்போது மரியாதை நிமித்தமாகத் தரப்பட்டுப் பெரியவர்களிடம் போய்ச் சேரும். பித்துப் பிடித்தவர் தலையில் தேய்க்கப்படும். அரிவாள்மணையில் ஊறுகாய்க்காக அரியப்படும். உப்பிட்டு ஊறும் உப்புமேல் ஆடும். சாறு கண்ணில் பட்டால் எரியும் குணம் கொண்டது.