Wednesday, February 25, 2015

இனிக்கும் தமிழ்-11




நாம் அவமானப்படுத்தப் படுகிறோம்..

நம் எண்ணங்கள் எள்ளி நகைக்கப்படுகின்றன..

இந்நிலையில் நாம் என்ன செய்வோம்...

ஒன்று நம்மை புரியாதவர்களிடமிருந்து பிரிவோம்..

அல்லது..இவர்கள் எப்படிப் போனால் என்ன..நம்மை விரும்புபவர்களும் இருக்கிறார்களே..என மகிழ்வோம்..

அல்லது..இவர்களிடமிடுந்து விலகி..இவர்கள் கண் காணா இடத்திற்கு செல்வோம்..

கவிச்சக்கரவர்த்தி கம்பனுக்கும் அப்படி ஒரு நிலை ஏற்பட்டது.சோழ மன்னனிடம் ஏற்பட்ட சிறு பிணக்கு காரணமாய்..அவனால் அவமானப் படுத்தப்பட்டு..அந்த நாட்டை விட்டே போக எண்ணிய கம்பன்..மன்னனைப் பார்த்து..கீழ் கண்ட பாடலைப் பாடுகிறான்..

மன்னவனும் நீயோ வளநாடும் உன்னதுவோ
உன்னையறிந் தோதமிழை ஓதினேன் - என்னை
விரைந்தேற்றுக் கொள்ளாத வேந்துண்டோ? உண்டோ
குரங்கேற்றுக் கொள்ளாத கொம்பு



நீயும் ஒரு மன்னனா..இந்த நாடு உனக்கு சொந்தமா..நீ இருக்கிறாய் என்ற எண்ணத்திலா நான் தமிழ் பாடும் கவிஞன் ஆனேன்..கவிஞனான என்னை எந்த நாட்டிற்குச் சென்றாலும் அந்நாட்டு மன்னர்கள் விரும்பி வரவேற்பார்கள்..எப்படி..ஒரு குரங்கை..மரத்தின் சிறு கிளையும் தாங்குகிறதோ..அதுபோல மன்னர்கள் என்னை தாங்குவர்..என்கிறான்.
..


இதையே ஔவையார் மூதுரையில் இப்படிச் சொல்கிறார்

மன்னனும் மாசறக் கற்றோனும் சீர்தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன்தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோற்குச்
சென்றஇடம் எல்லாம் சிறப்பு

ஒரு நாட்டு மன்னன், கல்வி அறிவு படைத்தவன்..இவர்களில் யார் சிறந்தவன் என்று பார்த்தால்..கற்றவனே சிறந்தவன்..ஒரு நாட்டு மன்னனுக்கு அவன் நாட்டில்தான் மதிப்பு, சிறப்பு..அந்நாட்டை விட்டு வெளியேறினால்..மன்னன் சாதாரணமானவன்.ஆனால்..கல்வி அறிவாளிக்கு,அவன் எந்த நாட்டில் இருந்தாலும், அங்கு எந்த இடத்திற்குச் சென்றாலும் சிறப்புடையவனாகக் கருதப் படுவான்

No comments:

Post a Comment