Tuesday, February 24, 2015

இனிக்கும் தமிழ் - 10



வள்ளுவனின் சொல் விளையாட்டுகளை கீழ்கண்ட குறள்களில் இந்த இடுகையில் காணலாம்..
ஆற்றுதல் என்னும் சொல்லை வைத்து ஈகை அதிகாரத்தில் ஐந்தாவது குறளாக அவர் சொல்வது என்ன பார்க்கலாம்.

ஆற்றுவா ராற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவா ராற்றலிற் பின்

பசியைப் பொறுத்துக் கொண்டு விரதம் இருப்பது சிறந்தது என அதைக் கடைப்பிடிப்பதைவிடப் பசியோடிருக்கும் ஒருவருக்கு உணவு அளிப்பதே சிறந்ததாகும்.

அடுத்து..ஒருவர் மீது ஏற்படும் பழியை விடக் கொடுமையானது..அவர் வாழ்வில் வேறேதும் இருக்க முடியாது.புகழ் அதிகாரத்தில் இதையே வசை,இசை,வாழ்வார் போன்ற சொற்களால் விளையாடியுள்ளார்.

வசையொழிய வாழ்வாரே வாழ்வார் இசையொழிய
வாழ்வாரே வாழா தவர்

பழி உண்டாகாமல் வாழும் வாழ்க்கையே வாழ்க்கை எனப்படும்.புகழ் இல்லாதவர் வாழ்வதும்,வாழாததும் ஒன்று போலத்தான்

தவம் அதிகாரத்தில் பத்தாவது குறள் இது.இலர்,பலர்.சிலர் என வள்ளுவனின் விளையாட்டு இக்குறளில்

இலர்பல ராகிய காரணம் நோற்பார்
சிலர்பலர் நோலா தவர்

ஆற்றலற்றவர்கள் பலராக இருப்பதற்குக் காரணம், மன உறுதி கொண்டவர் சிலராக இருப்பதும்..உறுதியற்றவர் பலராக இருப்பதும் தான்..

அடுத்து அவனது சொல்விளையாட்டு..இறந்தார்,துறந்தார் என்பதை வைத்து.வெகுளாமை யில் கடைசி குறள்

இறந்தார் இறந்தா ரனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

எல்லையற்ற சினம் கொள்பவர்கள் இறந்தவர்களுக்கு ஒப்பாவார்கள்.சினத்தை அறவே துறந்தவர் முற்றும் துறந்த துறவிக்கு ஒப்பாவர்.

No comments:

Post a Comment