Tuesday, April 7, 2015

இனிக்கும் தமிழ் -26



பணம் வாழ்வில் முக்கியமில்லை குணம் தான் முக்கியம் என்றெல்லாம் நாம் சொன்னாலும்..நம்மிடம் செல்வம் இல்லையெனில் மற்றவர்களால் சற்று இகழ்ச்சியுடனேயே பார்க்கப் படுகிறோம் என்பதே நடைமுறை உண்மை.

செல்வத்தின் சிறப்பை நன்கு உணர்ந்தவர் திருவள்ளுவர்..அருளும் பொருளும் மனிதனின் இன்றியமையாதத் தேவைகள்.ஆயின்..இவை இரண்டிடிலும் பொருளின் அவசியத்தை மறக்கமுடியாது...மறுக்கவும் முடியாது..பொருளில்லாமல் இவ்வுலகில் இன்பமாக வாழ முடியாது என்பது உண்மை..ஆனால் வள்ளுவனோ..மேலும் ஒரு படி அதிகம் சென்று..

அருளில்லார்க் கவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்
கிவ்வுலகம் இல்லாகி யாங்கு - என்கிறார்

பொருளின் பெருமை இது..அருள் என்பது அன்பின் வழித்தோன்றலாகும்..தொடர்புடையாரிடத்துக் கொள்ளும் பற்று அன்பு எனப்படும்..தொடர்பில்லாதவரிடம் கொள்ளும் பற்று அருள் ஆகும்.இவை இரண்டும் உலக மாந்தர்க்கு வேண்டிய பண்புகள்..ஆனால் அன்பும்..அருளும் உடையவரிடத்து பொருள் இல்லையேல் என்ன பயன்?

அதே போல் பொருளுடையவரிடம், அன்பும்..அருளும் இருப்பின் அது சுற்றத்தாருக்கும்...பிறருக்கும் பயன்படும்..

பொருளின் சிறப்பை மற்றுமொரு இடத்தில் சொல்கிறார்....

அன்பு என்பது ஒரு நல்ல தாயைப் போல..அந்தத் தாயின் குழந்தையே அருள் ..அந்த அருள் குழந்தையை வளர்க்க ஒரு செவிலித்தாய் வேண்டும்..அவள் வறுமை மிக்கவளாய் இருந்தால்..குழந்தை எப்படி நன்கு வளரும்..ஆகவே அப்படிப்பட்ட செவிலித்தாய் செல்வம் மிக்கவளாய் இருக்க வேண்டும்..

அன்பு என்னும் தாய்ப் பெற்ற அருள் என்னும் குழந்தை வளர பொருள் என்னும் செவிலித்தாய் வேண்டும்.. அப்போதுதான் அது ஓங்கி வளர்ந்து புகழ்ப் பெற்று வாழும்..இந்த உலக வாழ்க்கையின் உண்மையையே

அருளென்னும் அன்பீன் குழவி பொருளென்னும்
செல்வச் செவிலியால் உண்டு

என்கிறார் வள்ளுவர்.

No comments:

Post a Comment