Thursday, April 30, 2020

இனிக்கும் தமிழ்

விவேக சிந்தாமணி - தேவை இல்லாதது 


நாம் எல்லோரும் ஒரு கால கட்டத்தில் தேவை இல்லாதவர்களாகப் போய் விடுகிறோம்.

நம்மிடம் இருந்து ஏதாவது பலன் கிடைக்கும் வரை தான் உலகம் நம்மை வேண்டும்,  விரும்பும்.அதற்குப் பின் கறிவேப்பிலையாய்த் தூக்கிப் போட்டு  விடும்.

தேவைப்படும் வரும் வரை உன்னைச் சுற்றுவார்கள்.உன் தேவை முடிந்ததும் உன்னையே தூக்கி எறிவார்கள்.
 என்றெல்லாம் கூறி இப்போதே நம்மை தயார் படுத்துகிறது விவேக சிந்தாமணி.

பிள்ளைகள் பெரியவர்கள் ஆகி விட்டால் பெற்றோரின் சொல்லை கேட்க  .மாட்டார்கள்.  வயதானால் மனைவி கணவனை மதிக்க மாட்டாள். எல்லா வித்தையும் கற்ற பின்னால் சீடன் ஆசிரியனை மதிக்க  மாட்டான். நோய் குணமாகி விட்டால் நோயாளி மருத்துவனை மதிக்க மாட்டான்.

இது உலக இயற்கை. உலகம்  சுயநலமானது. நம்மால் உபயோகம் இருக்கும் வரைதான் உலகம் நம்மை  மதிக்கும்.

எந்தத் துறையில் நீங்கள் இருந்தாலும் சரி



பாடல்


பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான் 
கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள் 
தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான் 
உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார்

(பண்டிதர்- மருத்துவர்)

Tuesday, November 5, 2019

இனிக்கும் தமிழ் - 102

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே
இதன் பொருள் :
திதத்த ததித்த என்னும் தாள வரிசைகளை, தன்னுடைய நடனத்தின் மூலம் நிலைபடுத்துகின்ற, உன்னுடைய தந்தையாகிய பரமசிவனும், மறை கிழவோனாகிய பிரம்மனும், புள்ளிகள் உடைய படம் விளங்கும், பாம்பாகிய ஆதிசேஷனின், முதுகாகிய இடத்தையும், இருந்த இடத்திலேயே நிலைபெற்று, (ஆனால்) அலை வீசுகின்ற, சமுத்திரமாகிய திருப்பாற்கடலையும் (தன்னுடைய வாசஸ்தலமாகக் கொண்டு), அயர்பாடியில் தயிர், மிகவும் இனிப்பாக இருக்கிறதே என்று சொல்லிக்கோண்டு, அதை மிகவும் வாரி உண்ட (திருமாலும்), போற்றி வணங்குகின்ற, பேரின்ப சொரூபியாகிய, மூலப்பொருளே, தந்தங்களை உடைய, யானையாகிய ஐராவதத்தால் வளர்க்கப்பட்ட, கிளி போன்ற தேவயானையின், தாசனே, பல தீமைகள் நிறைந்ததும், ரத்தம் மாமிசம் முதலிய சப்த தாதுக்களால் நிரப்பப்பட்டதும், மரணம் பிறப்பு இவைகளோடு கூடியதும், பல ஆபத்துக்கள் நிறைந்ததும் (ஆகிய) எலும்பை மூடி இருக்கும் தோல் பை (இந்த உடம்பு), அக்னியினால், தகிக்கப்படும், அந்த அந்திம நாளில், உன்னை இவ்வளவு நாட்களாக துதித்து வந்த என்னுடைய புத்தி, உன்னிடம் ஐக்கியமாகி விட வேண்டும். ..
திருமுருக கிருபானந்த வாரியார் அவர்கள் கூறிய விளக்கம்
 
திதத்தத் தத்தித்த – “திதத்தத் தத்தித்த” என்னும் தாளமானங்களை,
திதி – திருநடனத்தால் காக்கின்ற
தாதை – பரமசிவனும்
தாத – பிரமனும்
துத்தி – படப்பொறியினையுடைய
தத்தி – பாம்பினுடைய
தா – இடத்தையும்
தித – நிலைபெற்று
தத்து – ததும்புகின்ற
அத்தி – சமுத்திரத்தையும் பாயலாகக்கொண்டு
ததி – தயிரானது
தித்தித்ததே – தித்திக்கின்றதென்று
து – உண்ட கண்ணனும்
துதித்து – துதி செய்து வணங்குகின்ற
இதத்து – பேரின்ப சொரூபியான
ஆதி – முதல்வனே!
தத்தத்து – தந்தத்தையுடைய
அத்தி – அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்ட
தத்தை – கிளி போன்ற தெய்வயானைக்கு
தாத – தொண்டனே!
தீதே – தீமையே
துதை – நெருங்கிய
தாது – சப்த தாதுக்களால் நிறைந்ததும்
அதத்து – மரணத்தோடும்
உதி – ஜனனத்தோடும்
தத்தும் – பல தத்துக்களோடும்
அத்து – இசைவுற்றதுமான
அத்தி – எலும்புகளை மூடிய
தித்தி – பையாகிய இவ்வுடல்
தீ – அக்கினியினால்
தீ – தகிக்கப்படுகின்ற
திதி – அந்நாளிலே
துதி – உன்னைத் துதிக்கும்
தீ – புத்தி
தொத்தது – உனக்கே அடிமையாகவேண்டும்

Tuesday, September 10, 2019

இனிக்கும் தமிழ்

ஒரு வேதியன்  தன்னுடைய மனைவி மற்றும் கைக் குழந்தையோடு மதுரை நோக்கி வனது கொண்டிருந்தான். நடுவில், மனைவி நீர் வேண்டும் என்று கேட்கவே, அவளை ஒரு மரத்தடியில் இருத்திவிட்டு, நீர் கொண்டு வரச் சென்றான். அப்போது அந்த மரத்தின் மேல் சிக்கியிருந்த ஒரு அம்பு காற்றில் கீழே விழுந்தது. விழுந்த அம்பு, அந்த வேதியனின் மனைவியின் வயிற்றில் பாய்ந்ததால் அவள் இறந்து போனாள். நீர் கொண்டுவந்த வேதியன் இறந்து கிடக்கும் மனைவியைப் பார்த்தான். இவளை யார் கொன்று இருப்பார்கள் என்று சுற்று முற்றும் பார்த்த போது , அங்கு ஒரு வேடன் இருப்பதைக் கண்டு, அவன்தான் கொன்றிருக்க வேண்டும் என்று நினைத்து அவனை பாண்டிய மன்னனிடம் கொண்டு சென்றான்.

வேடனை தண்டிக்க வேண்டும் என்று வேதியன் வேண்டுகிறான்.

தான் கொல்லவே இல்லை என்று வேடன் சாதிக்கிறான்.

அமைச்சர்களும், இதற்கு நூல்களில் ஒரு வழியும் இல்லை. இறைவன் தான் வழி காட்ட வேண்டும் என்று சொல்லி விட்டார்கள்.

பாண்டியன் இறைவனிடம் முறையிட்டான். அப்போது, "இந்த ஊரில் உள்ள வணிகத் தெருவில் ஒரு திருமணம் நடக்கிறது. அங்கு நீ அந்த வேதியனோடு சென்று பார். உன் குழப்பத்தை தீர்த்து வைப்போம்" என்று அசரீரி சொல்லக் கேட்டு, மன்னனும் வேதியனும் அங்கு சென்றார்கள்.

அப்போது, இறை அருளால், இரண்டு எம தூதர்கள் பேசுவது அவர்களுக்குக் கேட்டது.

இரண்டு பேரில் ஒருவன் கேட்கிறான் "இந்த வீட்டில் உள்ள மணமகனின் வாழ் நாள் முடிந்து விட்டது. அவன் உயிரை கொண்டு வரும்படி நம் தலைவர் சொல்லி இருக்கிறார். இவனுக்கோ ஒரு நோயும் இல்லை. இவன் உயிரை எப்படி எடுப்பது" என்று கேட்கிறான்.

இது முன் கதைச் சுருக்கம்.

இப்போது

அதற்கு இன்னொரு தூதன் சொல்கிறான்,

"எப்படி ஆல மரத்தில் முன்பே சிக்கியிருந்த அம்பை காற்றால் வீழ்த்தி பார்பனியின் உயிரைக் கவர்ந்தோமோ அப்படி, இந்த திருமண ஆரவாரத்தில் வெளியே கட்டியிருக்கும் கன்றை ஈன்ற பசுவை வெருண்டு ஓடச் செய்து , இவனை குத்த வைத்து இவன் உயிரைக் கவர்வோம்"

என்றான்.

பாடல்


ஆற்று ஆல் ஏறு உண்ட கணை அருகு ஒதுங்கும் பார்ப்பனியைக் 
காற்றுஆல் வீழ்த்து எவ்வாறு கவர்ந்தோம் அப்படி  இந்தச் 
சாற்று ஆரவாரத்தில் தாம்பு அறுத்துப் புறம் நின்ற 
ஈற்று ஆவை வெருள விடுத்து இவன் ஆவி கவர்க  என்றான்.

பொருள்


ஆற்று = வழி , வழியில் உள்ள

ஆல் = ஆலமரத்தில்

ஏறு உண்ட = ஏறியிருந்த

கணை = அம்பை

அருகு = அருகில்

ஒதுங்கும் = ஒதுங்கி இருந்த

பார்ப்பனியைக் = பார்பனப் பெண்ணை

காற்றுஆல் = காற்றினால்

வீழ்த்து = விழச் செய்து

எவ்வாறு கவர்ந்தோம் = எப்படி கவர்ந்தோமோ

அப்படி = அப்படி

இந்தச் = இந்த

சாற்று ஆரவாரத்தில் = பெரிய ஆரவாரத்தில்

தாம்பு அறுத்துப் = கட்டியிருக்கும் கயிற்றை அறுத்து

புறம் நின்ற = வெளியே நிற்கும்

ஈற்று ஆவை = கன்றை ஈன்ற பசுவை

வெருள = பயந்து ஓடும்படி

விடுத்து = செய்து

இவன் ஆவி  = இவனுடைய ஆவியை

கவர்க  என்றான் = கவர்ந்து கொள்வோம் என்றான்.


"ஆற்று ஆல் ஏறு உண்ட கணை" என்ற வரியில், ஆற்று என்ற சொல் வருகிறது. 

ஆறு என்றால் வழி. 


ஆற்றுப் படை என்று ஒரு பாடல் வகை உண்டு.  அதாவது, ஒரு தலைவனிடம் நன்மையைப் பெற்ற ஒருவன், மற்றவனை அதே வழியில் சென்று நன்மை அடைய வழி காட்டுவது. 

ஒரு புலவன் அரசனை பாடி பரிசு பெற்றால், மற்ற புலவர்களுக்கும் அதை எடுத்துச் சொல்லி அவர்களை  ஆற்றுப் படுத்துவது.

நக்கீரர் முருகன் அருள் பெற்றார். மற்றவர்களும் முருகன் அருள் பெற வழி சொல்லித் தந்த பாடல்களுக்கு  திருமுருகாற்றுப் படை என்று பொருள். 

சிறுபாணாற்றுப் படை, பெரும்பாணாற்றுப் படை என்று பாடல்கள் உண்டு. 


கதை எப்படி போகிறது என்று பாருங்கள். 


திருமண வீடு. மணமகன் சாகப் போகிறான். எப்படி இருக்கும் ? ஒரு படபடப்பு  நமக்குள் வருகிறது அல்லவா ? 

வாசிக்கும் நமக்குத் தெரியும்.  அங்குள்ள யாருக்கும் தெரியாது. 

அடுத்து என்ன ஆகிறது என்று பார்ப்போம் 

Monday, September 9, 2019

இனிக்கும் தமிழ் - 100

இனிக்கும் தமிழ் நூறாவது பதிவு இது.
இனிக்கும் சங்கப்பாடல்கள் பல ஆயிரம் கொட்டிக் கிடக்கின்றன.அவற்றுள் சிலவற்றை, கடந்த சில மாதங்களாக வழங்கி வந்தேன்.

இன்றுடன் இப்பணிக்கு சற்றே ஓய்வு கொடுக்க எண்ணியுள்ளேன்.

இன்றைய பதிவில்..

இனிக்கும் தமிழ் என பெயரிடப்பட்டு, மீசைக்கவிஞனின் பாடல் ஏதும் இல்லையெனில் அது முழுமையாக நிறைவு பெற்றதாக ஆகாது.

ஆகவே..செந்தமிழ் நாடு எனக் கேட்டதுமே தேன் பாய்கிறது காதுகளில் என்ற கவிஞன்..தமிழ்நாட்டின் பெருமைகளைப் பாடுவதுடன் இத்தொடர் நிறைவுபெறுகிறது.

இதைத்தொடர்ந்து படித்தவர்கள் அனைவருக்கும் நன்றி.

செந்தமிழ் நாடெனும் போதினிலே - இன்பத்
தேன் வந்து பாயுது காதினிலே - எங்கள்
தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு
சக்தி பிறக்குது மூச்சினிலே 
வேதம் நிறைந்த தமிழ்நாடு - உயர்
வீரம் செறிந்த தமிழ்நாடு - நல்ல
காதல் புரியும் அரம்பையர் போல் - இளங்
கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு

காவிரி தென்பெண்ணை பாலாறு - தமிழ்
கண்டதோர் வையை பொருனை நதி - என
மேவிய யாறு பலவோடத் - திரு
மேனி செழித்த தமிழ்நாடு

முத்தமிழ் மாமுனி நீள்வரையே - நின்று
மொய்ம்புறக் காக்குந் தமிழ்நாடு - செல்வம்
எத்தனையுண்டு புவிமீதே - அவை
யாவும் படைத்த தமிழ்நாடு 

நீலத் திரைக்கட லோரத்திலே - நின்று
நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை -வட
மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ்
மண்டிக் கிடக்குந் தமிழ்நாடு

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க்
கம்பன் பிறந்த தமிழ்நாடு - நல்ல
பல்விதமாயின சாத்திரத்தின் - மணம்
பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு 

வள்ளுவன் தன்னை உலகினுக்கே - தந்து
வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - நெஞ்சை
அள்ளும் சிலப்பதி காரமென்றோர் - மணி
யாரம் படைத்த தமிழ்நாடு

சிங்களம் புட்பகம் சாவக - மாதிய
தீவு பலவினுஞ் சென்றேறி - அங்கு
தங்கள் புலிக்கொடி மீன்கொடியும் - நின்று
சால்புறக் கண்டவர் தாய்நாடு 

விண்ணை யிடிக்கும் தலையிமயம் - எனும்
வெற்பை யடிக்கும் திறனுடையார் - சமர்
பண்ணிக் கலிங்கத் திருள்கெடுத்தார் - தமிழ்ப்
பார்த்திவர் நின்ற தமிழ்நாடு 

சீன மிசிரம் யவனரகம் - இன்னும்
தேசம் பலவும் புகழ்வீசிக் - கலை
ஞானம் படைத் தொழில் வாணிபமும் - மிக
நன்று வளர்த்த தமிழ்நாடு 

Saturday, September 7, 2019

இனிக்கும் தமிழ்

பட்டினத்தார் பாடல் ஒன்று


பூஜை, புனஸ்காரம், மந்திரம், ஜபம், வேண்டுதல் என்று எத்தனையோ காரியங்கள் செய்கிறோம் ? எல்லாம் எதற்காக என்று கூடத் தெரியாமல் செய்து கொண்டு இருக்கிறோம்.

ஆற்றில் விழுந்து விட்டோம். அடித்துச் செல்லப் படுகிறோம். இருந்தும் கரை எங்கே இருக்கிறது என்று அறிந்து கொள்ளாமல் இருக்கிறோமே என்று பட்டினத்தார் நம்மைப் பார்த்து பரிதாபப் படுகிறார். 

இப்படி, எதற்காகச் செய்கிறோம் என்று அறியாமல் அலைபவர்களைப் பற்றிய பாடல்

பாடல்


நீற்றைப் புனைந்தென்ன? நீராடப் போயென்ன? நீ மனமே 
மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை மாமறைநூல் 
ஏற்றிக் கிடக்கும் எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்? 
ஆற்றில் கிடந்தும் துறையறி யாமல் அலைகின்றையே !

பொருள் 

நீற்றைப் புனைந்தென்ன? = திரு நீற்றை பூசி என்ன ? 

நீராடப் போயென்ன? = கங்கை முதலான புனித தீர்த்தங்களில் நீராடி என்ன பயன் ?

நீ மனமே = நீ மனமே

மாற்றிப் பிறக்க வகையறிந் தாயில்லை = மீண்டும் மீண்டும் பிறந்து கொண்டே இருக்கும் இந்த நிலையை மாற்றி பிறக்கும் வகையை நீ அறியவில்லை.

மாமறைநூல்  = பெரிய மறை நூல்களில்

ஏற்றிக் கிடக்கும் = எழுதப்பட்டு இருக்கும்

எழுகோடி மந்திரம் என்ன கண்டாய்?  = கோடிக்கணக்கான மந்திரங்களை படித்தும் நீ என்ன கண்டாய் (ஒன்றும் காணவில்லை )

ஆற்றில் கிடந்தும் = ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டும்

துறையறி யாமல் அலைகின்றையே ! = படித்துறை அறியாமல் அலைகின்றாயே

Friday, September 6, 2019

இனிக்கும் தமிழ்

கம்ப இராமாயணம் 


இரவு..

இரவெல்லாம் இருள் கவிழ்ந்திருக்கிறது. 

சூரியன் வந்த பின், இருள் இருந்த இடம் தெரிவதில்லை. 

அது போல

இராமா, 

இதுவரை எப்படியோ தெரியாது, 

ஆனால் நீ வந்த பின், இந்த உலகில் துன்பம் என்று ஒன்று இருக்க முடியாது என்கிறான் விஸ்வாமித்திரன்.

எங்கே ?

இராமன் பாதத் துளி பட்டு அகலிகை சாப விமோசனம் பெற்ற இடத்தில்.
மிக மிக அருமையான பாடல், ஆழமான பாடலும் கூட....


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்;
இனி. இந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் அன்றி. மற்று ஓர்
துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்.
மழை வண்ணத்து அண்ணலே! உன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்;
கால் வண்ணம் இங்குக் கண்டேன்.

இவ்வண்ணம் = இந்த மாதிரி

நிகழ்ந்த வண்ணம் = நிகழ்ந்த பின். அகலிகை சாப விமோசனம் பெற்ற பின்

இனி. = இனிமேல்

இந்த உலகுக்கு எல்லாம் = இந்த உலகத்திற்கு எல்லாம்

உய்வண்ணம் அன்றி = உய்யும் வழி அன்றி

மற்று ஓர் = வேறு ஒரு

துயர் வண்ணம் = துயரங்கள்

உறுவது உண்டோ? = நேர்வது உண்டோ? (கிடையாது)

மை வண்ணத்து = மை போன்ற கரிய நிறம் கொண்ட
அரக்கி =அரக்கி (தாடகை)

போரில்.= சண்டையில்

மழை வண்ணத்து அண்ணலே! = மழை முகில் போன்ற கரிய நிறம் கொண்ட அண்ணலே

உன் = உன்னுடைய

கை வண்ணம் = கை வண்ணமாகிய வில்லாற்றலை

அங்குக் கண்டேன் =அங்கு கண்டேன்

கால் வண்ணம் = சாப விமோசனம் தரும் திருவடியின் வண்ணத்தை

இங்குக் கண்டேன் = இங்கு கண்டேன்


இதில் என்ன ஆழம் என்று கேட்கறீர்களா? எழுதியவன் கம்பன்...


பாடலில் எத்தனை வண்ணம் ?

இவ்வண்ணம்
நிகழ்ந்த வண்ணம்
உய்வண்ணம்
துயர் வண்ணம்
மை வண்ணம்
மழை வண்ணம்
கை வண்ணம்
கால் வண்ணம்

மொத்தம் எட்டு வண்ணம். இறைவனை எண்குணத்தான் (எட்டு குணம் உள்ளவன் என்று சொல்வது மரபு).

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

என்பார் வள்ளுவர்.

அது என்ன கை வண்ணம், கால் வண்ணம் ?

ஒருவர் மேல் அன்பு செலுத்தும் போது நாம் கையை உபயோகப் படுத்துகிறோம்...அணைப்பது, கட்டி கொள்வது, கையேடு கை பின்னிகொள்வது போன்ற அன்பின் வெளிப்பாடுகளாய்

ஒருவர் மேலோ அல்லது ஒன்றன் மேலோ கோவமோ வெறுப்போ வரும்போது அதை காலால் எட்டி உதைக்கிறோம்

அன்புக்கு கை, வெறுப்புக்கு கால்.

ஆனால் இராமனோ, கோவம் கொண்ட அரக்கியின் மேல் கை வண்ணம் காண்பித்தான், அன்பு கொண்ட அகலிகை மேல் கால் வண்ணம் காட்டினான்.

விஸ்வாமித்திரன் ஆச்சரியப் படுகிறான்.

வண்ணம் வண்ணம் என்று சொல்லிக் கொண்டு வந்த கம்பன், அரக்கியயையும் இராமனையும் வண்ணமயமாகவே வருணிக்கிறான்.

மை வண்ணத்து அரக்கி, மழை வண்ணத்து அண்ணலே என்று.

பொய், சூது, கொலை போன்ற கெட்ட குணங்களால் நிறைந்ததால் மை போன்ற கரிய நிறத்து அரக்கி.

பிறருக்கு கொடுப்பதற்காகவே நீர் கொண்டு கருத்ததால் மழை மேகம் கருக்கிறது.. எனவே அந்த கரு மேகம் இராமனின் கருமைக்கு உதாரணம்
இராமன் மிதிலைக்கு வருகிறான். சாலையில் நடந்து வருகிறான். மேலே மாளிகையில் இருந்து சீதை காண்கிறாள். முதல் தடவை இருவரும் பார்த்துக் கொள்கிறார்கள்.

பார்த்த அந்த கணத்திலேயே காதல் பிறக்கிறது. இருவர் இதயமும் இடம் மாறுகிறது.

இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் என்பான் கவிச் சக்கரவர்த்தி கம்பன்.

பருகிய நோக்கு எனும்
    பாசத்தால் பிணித்து,
ஒருவரை ஒருவர் தம்
    உள்ளம் ஈர்த்தலால்,
வரி சிலை அண்ணலும்
    வாள் கண் நங்கையும்
இருவரும் மாறிப் புக்கு
    இதயம் எய்தினார்.


இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்இனிஇந்த உலகுக்கு எல்லாம்
உய்வண்ணம் இன்றிமற்று ஓர் துயர் வண்ணம் உறுவது உண்டோ?
மை வண்ணத்து அரக்கி போரில்மழை வண்ணத்து அண்ணலேஉன்
கை வண்ணம் அங்குக் கண்டேன்கால் வண்ணம் இங்குக் கண்டேன்!--  4

இவ்வண்ணம் நிகழ்ந்த வண்ணம்